பகவானே...மழையைக் கொடு... சிறப்பு யாகம் செய்த ஶ்ரீசங்கரமட சுவாமிகள்! வீடியோ
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீசங்கரமடத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தில் உள்ள வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டும் என சிறப்பு யாகம் மற்றும் பூஜைகள் செய்துள்ளனர்.
விழுப்புரம்: தமிழ்நாட்டில் நிலவும் வறட்சி நீங்கி மழை பெய்ய வேண்டி விழுப்புரத்தில் யாகம் செய்துள்ளனர். ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீ சங்கரமடத்தைச் சேர்ந்தவர்கள் இந்த யாகத்தை நடத்தியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவமழை பொய்த்த காரணத்தால் வரலாறு காணாத வகையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் மரணமடைந்துள்ளனர்.
மேலும் ஏரி, குளம், ஆறுகளில் நீர் வற்றிவிட்டதால் குடிநீருக்கு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கடுமையான வெப்பமும் நிலவி வருவதால் மக்கள் கடும் துயரத்துக்கு ஆட்பட்டு வருகின்றனர்.
மழை பெய்தால்தான் இனி இருக்கும் நாட்களில் குடிப்பதற்கு கொஞ்சமாவது நீர் கிடைக்கும் என்கிற நிலை உருவாகியுள்ளது. குடிநீருக்காக மக்கள் பல மைல்தூரம் நடந்து சென்று, பல மணிநேரம் காத்திருந்து ஒரு குடம் நீரை சுமந்து வருகின்ற மிக சோகமான சூழ்நிலை தமிழகம் முழுவதும் உள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் ஆஞ்சநேயர் கோயில் மற்றும் ஶ்ரீசங்கரமடத்தை சேர்ந்தவர்கள் மழை பெய்ய வேண்டும் என்று சிறப்பு யாகம் செய்துள்ளனர். இவர்கள் குளத்தில் நீரில் நின்று மந்திரங்களை ஜெபித்து மழை வரவேண்டும் என பிரார்த்தனை செய்துள்ளனர்.