வறட்சி நீங்கி வளம் செழிக்க குற்றால மலையில் அகஸ்தியருக்கு சிறப்பு பூஜை
நெல்லை: வறட்சி நீங்கி செழிப்பு வர குற்றாலம் மலையில் அகஸ்தியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மழை வளம் குறைந்து வறட்சி நீடித்து வருகிறது. பல மாநிலங்களில் குடிநீர் பஞ்சம் உள்பட பலவற்றுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு அகஸ்தியருக்கு சிறப்பு பூஜை நடத்த முடிவு செய்யப்பட்டது.
குற்றாலத்தில் உள்ள குற்றால நாதர் கோவிலில் இருந்து மலை உச்சியில் தென்மேற்கில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திரிகூடமலை. இது பார்வதி பர்வதம், சிவபெருமான் பர்வதம், மகாவிஷ்ணு பர்வதம் ஆகிய மூன்று பர்வதங்களை கொண்டது. இதில் விஷ்ணு பர்வத மலையின் உச்சியில் பரதேச புடலில் அகஸ்தியர் கோவில் உள்ளது.
இங்கு அகஸ்தியருடன் அத்ரியும், தேரையரும் உள்ளனர். காணப்பாக்கு பாதமும் உள்ளது. வறட்சி நீக்கி இயற்கை வளம் செழிக்க ஆண்டுதோறும் வைகாசி மாதம் 3வது வாரம் அகஸ்தியருக்கு 21 வகையான மூலிகைகளால் அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்தாண்டு முத்துகுமாரசாமி பூசாரி தலைமையில் ஏராளமான பொதுமக்கள் மலை பாதை வழியாக அகஸ்தியர் கோவிலை சென்றடைந்தனர்.
தொடர்ந்து அங்கு அகஸ்தியருக்கு 21 வகை மூலிகைகளால் அபிஷேகம் செய்யப்பட்டது. பல வகை கனிகள், சித்ரானங்கள் மற்றும் ரொட்டி ரசம் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பின்னர் அதிகாலையில் பக்தர்கள் மலை பாதை வழியாக பத்திரமாக கீழே இறங்கினர்.