அரவாணிகளுக்காகவே ஸ்பெஷல் சலூன்.. இது கோவையில்!
கோவை: நாட்டிலேயே முதல் முறையாக கோவையில் அரவாணிகளுக்கான ஸ்பெஷல் சலூன் திறக்கப்பட்டுள்ளது. எப் 1 கார்ப் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் இந்த சலூனைத் திறந்து வைத்தார்.
இந்த சலூன்தான் நாட்டிலேயே அரவாணிகளுக்கான பிரத்யேகமான சலூன் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த நாட்டினி கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளது.
லக்ஸ் ஸ்பா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சலூனின் இயக்குநர் ஜே. சிவப்பிரகாஷ் கூறுகையில், மக்களிடையே அரவாணிகள் குறித்து தவறான கருத்து உள்ளது. அது தவறு. அது மாற வேண்டும். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த சலூன் மற்றும் ஸ்பாவை நிர்மானித்தேன்.
சமூகத்தால் ஒதுக்கப்படும் நிலையில் உள்ள அரவாணிகளுக்கு நாங்கள் உதவிக் கரம் நீட்டுகிறோம். எங்களது ஆதரவைத் தெரிவிக்கவே, தன்னம்பிக்கை ஊட்டவே இந்த சலூன் திறக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த சலூன் மற்றும் ஸ்பா முற்றிலும் அரவாணிகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.