அவர்களை இணைத்தது எதுவென அவர்களுக்கே தெரியும்.. அன்பழகன் - கருணாநிதி!
திமுகவின் விழுதுகள் கருணாநிதியும் அன்பழகனும் அரசியல் உலக நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
சென்னை: திமுகவின் விழுதுகள் கருணாநிதியும் அன்பழகனும் அரசியல் உலக நட்பிற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள்.
இன்று நண்பர்கள் தினம் உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில், 76 வருடமாக நெருங்கிய நபர்களாக இருக்கும் திமுக தலைவர் கருணாநிதி , பொதுச்செயலாளர் அன்பழகனை விட வேறு யாரைப்பற்றி நினைவு கூற முடியும்.
அரசியலில் நீண்ட நாள் நண்பனும் கிடையாது, நீண்ட நாள் எதிரியும் கிடையாது என்பதை முறியடித்து பல வருடங்களாக இவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். இவர்களின் பெயரையே இந்த தினத்திற்கு வைக்கலாம், அத்தகையது இவர்களின் நட்பின் ஆழம்.
எப்படி நண்பர்கள் ஆனார்கள்
திமுக பொதுச்செயலாளர் அன்பழகன், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் நட்பு மிக நீண்டது. 1942ல் போடப்பட்ட நட்பு விதை இப்போது விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. அப்போது அண்ணா தலைமையில் நடந்த விழா ஒன்றில் முதல்முறையாக, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் அன்பழகன் மேடை இருக்கிறார். அதை கீழே இருந்து ரசிக்கிறார் கருணாநிதி. பேச்சு முடித்ததும் அண்ணா கருணாநிதிக்கு அன்பழகனை அறிமுகம் செய்து வைக்கிறார். அப்போது தொடங்கிய நட்பு நீண்டு வந்துள்ளது.
சிறந்த நட்பு
இருவரும் திமுக கட்சியின் தொடக்க கட்ட வளர்ச்சியில் அதிக பங்கெடுத்தனர். அண்ணா திமுகவை நிறுவிவிட்டு அதை வளர்க்கும் வேலைகளில் இறங்கிய போது, மேடை மேடையாக பேசியது அன்பழகனும், கருணாநிதியும்தான். காசில்லா அன்பழகனுக்கு பயண காசு கொடுத்து மேடையில் ஏறி பேச வைக்கும் அளவிற்கு கருணாநிதிக்கும், அன்பழகனுக்கும் நட்பு இருந்துள்ளது.
மிகவும் நெருக்கம்
அந்த நட்புதான் சோதனை காலத்திலும் கை கொடுத்தது. அண்ணா இறந்த போது, கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தவர் அன்பழகன்தான். அதேபோல், அண்ணாவிற்கு பின் எம்ஜிஆர் தனிக்கட்சி ஆரம்பித்த பின் கூட அன்பழகன் கருணாநிதிக்கு உறுதுணையாக இருந்தார். திமுக மூன்று முறை வரிசையாக தேர்தலில் தோற்றபோது கூட, அன்பழகன் கருணாநிதி பக்கமே நின்றார்.
சோதனை காலம்
அதேபோல், மிக முக்கியமான காலகட்டமான எமெர்ஜென்சி பிரச்சனையிலும் கருணாநிதி-அன்பழகன் ஒன்றாகவே இருந்தனர். இந்தியாவில் அப்போது நடந்த கைது பெரிய பிரச்சனையை உண்டாக்கியது. நிறைய பேர் கட்சி மாறினார்கள். நிறைய நட்புகளில் பிளவு ஏற்பட்டது. ஆனால் கருணாநிதி, அன்பழகன் நட்பு மட்டும் ஆலமரம் போல உறுதியாக வளர்ந்து கொண்டே இருந்தது.
பிளவிலும்
மிக முக்கியமாக திமுகவில் மிகப்பெரிய பிளவாக கருதப்பட்ட, வைகோ சென்ற போதும் கூட அன்பழகன் கட்சியில் உறுதியாக இருந்தார். அப்போது சில முன்னணி கட்சிகள் அவருக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் அன்பழகன் தாய் கழகத்தை விட்டும், தாயை போன்ற நண்பனை விட்டும் ஒரு அடி கூட நகரவில்லை. அதே நட்புதான், பாமக கூட்டணியில் இருந்து விலகிய போதும் கூட தொடர்ந்தது.
ஒன்றாக
இதோ இப்போதும் கூட அவர்கள் நட்பு தொடர்கிறது. இருவருக்கும் வயது 90 தாண்டிவிட்டது. ஒருவர் மருத்துவமனையில் இருக்கும் போது இன்னொருவர், கை தாங்கலாக அவரை பார்க்க வருகிறார். ஆனால் இப்போதும் கூட அந்த பாச பிணைப்பு அவர்களுக்கு மத்தியில் இருக்கிறது. அவர்களை இணைத்த விஷ்யம் எதுவென்று அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரியும்.
76 வருடம்
கருணாநிதியும் அன்பழகனும் நணபர்களாகி இதோடு 74 வருடங்கள் ஆகிவிட்டது. 2 வருடம் முன் நண்பர்கள் தினத்தில் கருணாநிதி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அன்பழகனும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள் சொல்லி இருந்தார். மேடையில் தொடங்கி, பேப்பரில் சென்று, டிவியில் வளர்ந்து தற்போது சமூக வலைத்தளம் வரை அவர்கள் நட்பு விருட்சமாக வளர்ந்து இருக்கிறது. இதைவிட நட்பிற்கு வேறென்ன எடுத்துக்காட்டு இருக்க முடியும்.