சென்ட்ரல் குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க சிறப்புக் குழு நியமனம்: டிஜிபி ராமானுஜம்
சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு குறித்து சிறப்பு குழு நியமிக்கப் பட்டுள்ளதாக டிஜிபி ராமானுஜம் தெரிவி்த்துள்ளார்.
இன்று காலை சுமார் 7.25 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்ததில், அதில் பயணம் செய்த 22 வயதுடைய சுவாதி என்ற பெண் உயிரிழந்துள்ளர்.
மேலும் படுகாயமடைந்த 14 பேர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். படுகாயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் குண்டுவெடித்த இடத்தை நேரில் ஆய்வு செய்தார் டிஜிபி ராமானுஜம். அப்போது செய்தியாளர்கள் மத்தியில் அவர் கூறியதாவது :-
குண்டுவெடித்த இடத்தில் மூத்த அதிகாரிகள் பலர் குவிக்கப் பட்டுள்ளனர். அதிக சக்தியில்லாத குண்டுகளே வெடித்திருப்பதாகத் தெரிகிறது. உளவுத்துறைக்கு இது சம்பந்தமாக மேலும் பல விவரங்கள் கிடைத்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதனடிப்படையில் மேற்கொண்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
இதுவரை சொல்லும் படியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. போலீசார் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். அடுத்தகட்ட விசாரணைக்குப் பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும். இது தொடர்பாக விசாரிக்க சிறப்புக் குழு நியமிக்கப் பட்டுள்ளது.
இந்தக் குண்டுவெடிப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை ரயில்வே போலீசார் தாக்கல் செய்வார்கள்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்த விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப் பட்டுள்ளதாக ராமானுஜம் தெரிவித்துள்ளார்.