கற்பித்தல் முறையில் மாற்றம்... நெல்லை மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கு தீவிர பயிற்சி!
வரும் கல்வி ஆண்டில் பாட திட்டம் மாற்றப்படுவதை அடுத்து நெல்லையில் மூன்று மாவட்ட பள்ளி ஆசிரியரா்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
திருநெல்வேலி : அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படுவதால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய கற்றல் முறைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்புகள் பயன் அளிக்கும் என்று கல்வி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
வரும் கல்வி ஆண்டில் தமிழகத்தில் புதிய கலைதிட்டம், பாடதிட்டம், புத்தகம் வடிவமைக்கப்படுவதை கருத்தில் கொண்டும், கற்றல் விளைவுகளின் அடிப்படையில் தொழில்நுட்பத்தையும் உள்ளடக்கிய புதிய கற்பித்தல் முறை மூன்று மாவட்டத்தில் 16 தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் முதல்கட்டமாக செயல்படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் அனைத்து வட்டாரங்களிலும் தலா இரண்டு பள்ளிகளில் 1 மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு 3ம் பருவத்தில் தற்போதுள்ள பாடத்திட்டத்தின் அனைத்து பாடங்களும் கற்றல் கற்பித்தலுக்கு உரிய செயல்பாடுகள் கற்றல் முறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கல்வி முறை தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் 3ம் பருவம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தின் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாட்கள் முன்னோட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர்கள், உதவி திட்ட அலுவலர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர். இந்த கற்றல் முறையில் மாணவர்களின் கல்வி தரம் உயருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.