தாம்பரம்- கொல்லம் சிறப்பு ரயில்: செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை
தாம்பரம் - கொல்லம் இடையே இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை: தாம்பரம் - கொல்லம் இடையே இன்று மாலை 5.30 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
கொல்லம் - தாம்பரம் இடையே மார்ச் 31ஆம் தேதி பகல் 1.00 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நடைபெற்று வருவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்குகிறது.
தமிழகத்தையும் கேரளாவையும் இணைக்கும் செங்கோட்டை -புனலூர் மீட்டர் கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு தற்போது புதிதாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாதையில் அதிவேக ரயில் இயக்கி சோதனை நடத்திய பிறகு, ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்த பாதையில் ஏற்கனவே செங்கோட்டையில் இருந்து பகவதிபுரம் வரையிலும், மறுமார்க்கத்தில் புனலூரில் இருந்து எடமண் வரையிலும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் முழுமையாக ரயில் இயக்கப்படவில்லை.
தெற்கு ரயில்வே அறிவிப்பு
இந்த நிலையில் தென்னக ரெயில்வே சார்பில் சென்னை தாம்பரத்தில் இருந்து கொல்லத்துக்கு சிறப்பு கட்டண ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் செங்கோட்டை- புனலூர் இடையே 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரெயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாம்பரத்தில் இருந்து கொல்லம்
இன்று மாலை 5.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் (வண்டி எண் 06027) புறப்படுகிறது. இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம் ஆகிய ஊர்கள் வழியாக பயணிக்கிறது.
இனிமையான பயணம்
மறுநாள் அதிகாலை 4.28 மணிக்கு சங்கரன்கோவில் ரயில் நிலையத்துக்கு வருகிறது. தொடர்ந்து 4.55 மணிக்கு கடையநல்லூர், 5.13 மணிக்கு தென்காசி, 5.50 மணிக்கு செங்கோட்டை, 6.13 மணிக்கு பகவதிபுரம், 7.13 மணிக்கு தென்மலை, 7.48 மணிக்கு எடமண், 8.30 மணிக்கு புனலூர், 8.48 மணிக்கு அவனீசுவரம், 9.15 மணிக்கு கொட்டாரக்கரை வழியாக காலை 10.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
கொல்லம் - தாம்பரம் ரயில்
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வண்டி எண் 06028) மார்ச் 31ஆம் தேதி மதியம் 1 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் 1.43 மணிக்கு கொட்டாரக்கரை, 1.58 மணிக்கு அவனீசுவரம், 2.10 மணிக்கு புனலூர், 2.43 மணிக்கு எடமண், 3.23 மணிக்கு தென்மலை, மாலை 4.30 மணிக்கு பகவதிபுரம், 4.55 மணிக்கு செங்கோட்டை, 5.13 மணிக்கு தென்காசி, 5.33 மணிக்கு கடையநல்லூர், 6 மணிக்கு சங்கரன்கோவில் ரயில் நிலையங்கள் வழியாக பயணித்து ஞாயிறு காலை 5.05 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
மதுரை - கொல்லம் பயணிகள் ரயில்
விடுமுறை காலத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க இந்த ரெயில் இயக்கப்படுவதாக ரயில்வே துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தகவலை மதுரை ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டு உள்ளது. இந்த பாதையில் நெல்லையில் இருந்து தென்காசி, செங்கோட்டை, புனலூர் வழியாக கொல்லத்துக்கும், மதுரையில் இருந்து கொல்லத்துக்கும் பாசஞ்சர் ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.