சென்னை-திருவனந்தபுரம் நடுவே கோவை வழியாக சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: பண்டிகை காலக் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, சென்னை சென்ட்ரல் மற்றும் திருவனந்தபுரத்தின் கொச்சுவேலி ரயில் நிலையங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கொச்சுவேலி- சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06338): கொச்சுவேலியிலிருந்து செப்டம்பர் 30ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 4.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அக்டோபர் 1ம்தேதி காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை சென்ட்ரல்-கொச்சுவேலி அதி விரைவு ரயில் (எண்: 06337): சென்னை சென்ட்ரலிருந்து அக்டோபர் 1ம் தேதி இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
கொச்சுவேலி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (எண்: 06340): கொச்சுவேலியிலிருந்து அக்டோபர் 5ம் தேதி மாலை 5 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும்.
சென்னை சென்ட்ரல் - கொச்சுவேலி ரயில் (06339): சென்னை சென்ட்ரலிருந்து அக்டோபர் 6ம் தேதி பிற்பகல் 12.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5 மணிக்கு கொச்சுவேலியைச் சென்றடையும்.
இந்தச் சிறப்பு, அதிவிரைவு ரயில்கள் கொல்லம், காயன்குளம், செங்கண்ணூர், கோட்டயம், திருவல்லா, எர்ணாகுளம் டவுண், ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
மேலும் கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரல் வரும் இரண்டு சிறப்பு ரயில்களும் பெரம்பூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.இந்தச் சிறப்பு மற்றும் அதிவிரைவு ரயில்களுக்கான முன்பதிவு செவ்வாய்க்கிழமையான நேற்று தொடங்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.