மகிழ்ச்சி செய்தி.. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே
Recommended Video
சென்னை: சென்னையில் இருந்து நெல்லை மற்றும், நாகர்கோவிலுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்குகிறது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு.
1) சென்னை எழும்பூர்- திருநெல்வேலி நடுவேயான சிறப்பு ரயில்
ரயில் எண் 06001 சென்னை எழும்பூர்-நெல்லை சிறப்பு கட்டண ரயில், ஆகஸ்ட் 3, 17, 24 மற்றும் 31ம் தேதிகள் மேலும், செப்டம்பர் 7 மற்றும் 21ம் தேதிகளில் எழும்பூரில் இரவு, 9.50 மணிக்கு கிளம்பி, முறையே மறுநாள் காலை 10.50 மணிக்கு நெல்லை சென்று சேரும்.
ரயில் எண் 06002 நெல்லை-சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில், நெல்லையில் செப்டம்பர் 2, 9 மற்றும் 23ம் தேதிகளில் மாலை 4 மணிக்கு நெல்லையில் கிளம்பி, மறுநாள் காலை 3.15 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
இரண்டாம் வகுப்பு ஏசி-1, மூன்றாம் வகுப்பு ஏசி-2, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 12 உள்ளிட்டவை இந்த ரயிலில் இருக்கும்.
தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருதாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர் மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் இந்த ரயில் நின்று செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லையில் இருந்து எழும்பூர் வரும் ரயில், மேற்கண்ட ரயில் நிலையங்கள் தவிர, மாம்பலம் ரயில் நிலையத்திலும் கூடுதலாக நின்று செல்லும்.
2) சென்னை சென்ட்ரல்-நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில்:
ரயில் எண் 06007 ஆகஸ்ட் 7, 14, 28ம் தேதிகள் மற்றும் செப்டம்பர் 4, 11, 18, 25ம் தேதிகளில் சென்ட்ரலில் இரவு 8 மணிக்கு கிளம்பும். மறுநாள் காலை 11.05 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.
ரயில் எண் 06008 நாகர்கோவிலில் ஆகஸ்ட் 8, 22, 29, செப்டம்பர் 5, 12, 19, 26ம் தேதிகளில் மாலை 5 மணிக்கு கிளம்பி மறுநாள் காலை 7.20 மணிக்கு சென்ட்ரல் வந்து சேரும்.
ஏசி முதல் வகுப்பு, 3 ஏசி மூன்றாம் வகுப்பு, 9 படுக்கை வசதி கொண்ட கோச்கள் இதில் உள்ளன. அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில், இந்த ரயில் நின்று செல்லும். நாகர்கோவிலில் இருந்து சென்ட்ரல் வரும்போது பெரம்பூரில் கூடுதலாக இந்த ரயில் நிற்கும்.