எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனத்துக்கு சென்னையில் மேலும் 9 தியேட்டர்கள் நடத்த அனுமதி
சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்பிஐ சினிமா நிறுவனத்துக்கு சென்னையில் புதிதாக 9 தியேட்டர்கள் நடத்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு அனுமதி வழங்கியுள்ளார்.
சென்னையில் புதிய தியேட்டர்கள் நடத்த அனுமதி கோரி இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிவிஆர், எஸ்பிஐ உள்ளிட்ட சினிமா நிறுவனங்கள் போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித்தனர். ஆனால் இதற்கு 2 ஆண்டுகளாகியும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதையடுத்து, பிவிஆர் சினிமா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ நகரங்களில் ஏற்கனவே நாங்கள் பல சினிமா தியேட்டர்கள் நடத்தி வருகிறோம். இந்நிலையில், புதிதாக தியேட்டர் நடத்த உரிமம் வழங்க சென்னை போலீஸ் கமிஷனரிடம் விண்ணப்பித்தோம். ஆனால் எங்கள் மனு தொடர்பாக இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே எங்களது மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதனையடுத்து, அவர்களுடைய மனுக்களை நான்கு வாரத்துக்குள் பரிசீலனை செய்ய உயர்நீதிமன்றம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், எஸ்பிஐ நிறுவனத்துக்கு புதிதாக 9 தியேட்டர்கள் நடத்த சென்னை போலீஸ் கமிஷனர் அனுமதி வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.