சென்னை-பெங்களூர் கட்டணம் ரூ.22 ஆயிரம்.. வெள்ளத்தில் கொள்ளையடித்ததா ஸ்பைஸ் ஜெட்?
சென்னை: மழை வெள்ளத்தில் இருந்து தப்பிக்க மக்கள் விரைந்ததை பயன்படுத்தி ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் கொள்ளை லாபம் ஈட்டியதாக போட்டோ ஆதாரங்களுடன் பயணி ஒருவர் பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு வைரல் போல பரவி வருகிறது.
கடந்த வாரம் சென்னை கன மழையால் தத்தளித்துக்கொண்டிருந்தது. அப்போது, சென்னையில் இருந்து எப்படியாவது வெளியூர்களுக்கு தப்பி செல்ல வேண்டும் என பலர் முயன்றனர்.
Posted by Anupam Anand onThursday, December 10, 2015
அப்படித்தான், அனுபம் ஆனந்த் என்பவரும் விமானத்தில் பெங்களூர் செல்ல முடிவெடுத்தார். ஆனால் குறைந்த கட்டணத்திற்கு பெயர் பெற்ற, ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனமோ, 350 கி.மீ தொலைவுள்ள பெங்களூருக்கு செல்ல ஒரு நபருக்கான கட்டணமாக ரூ.22 ஆயிரம் செலுத்த கேட்டது.
வழக்கமாக 3 ஆயிரம் முதல் 5 ஆயிரத்திற்குள் முடிந்துவிடும் பயண கட்டணத்தை இவ்வளவு உயர்த்தி கேட்பது ஏன் என்று அனுபம் ஆனந்த் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருப்பதால் டிக்கெட் ரேட்டை கூட்டியுள்ளோம் என்று பதில் கிடைத்துள்ளது.
இதையடுத்து 22 ஆயிரம் ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்துள்ளார் அனுபம் ஆனந்த். ஆனால், விமானத்திற்குள் போன பிறகுதான் தெரிந்துள்ளது, பல இருக்கைகள் காலியாக இருப்பது. ஆத்திரமடைந்த அனுபம், சீட்டில் படுத்துகிடந்தபடி பல போட்டோக்களை எடுத்துள்ளார். சீட்டுகள் எவ்வளவு காலியாக உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் போட்டோக்கள் எடுக்கப்பட்டுள்ளன.
இதை தனது பேஸ்புக் பக்கத்தில் அனுபம் ஆனந்த் ஷேர் செய்துள்ளார். டிசம்பர் 8ம் தேதி வெளியிடப்பட்ட இந்த போஸ்டை இன்று மாலை வரை 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஷேர் செய்துள்ளனர். பிரதமர் அலுவலகம் மற்றும் விமான அமைச்சகத்தின் கவனத்திற்கு இந்த விவகாரம் போயே தீர வேண்டும், மக்கள் வருங்காலங்களில் இந்த விமான சேவையை புறக்கணிக்க வேண்டும் என்கிறார் அனுபம் ஆனந்த்.