கூலி உயர்வு கேட்டு விசைத்தறியாளர்கள் நாளை முதல் போராட்டம்..
கோவை: கூலி உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி கோவை, திருப்பூர் மாவட்டங்களில் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை துவக்குவதாக விசைத்தறியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அவிநாசி விசைத்தறி உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்களின் அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு சங்க தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார்.
விசைத்தறி தொழிலில் மின் கட்டணம், உதிரி பாகங்கள், டீசல், போக்குவரத்து செலவினங்கள் உயர்ந்து விட்டதால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கொடுக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழ்நிலையில் தொழில் சென்று கொண்டுள்ள நிலையில் கூடுதலாக கூலி உயர்வு கேட்டு ஜவுளி உற்பத்தியாளர்களுடன் ஏழு முறை பேச்சு நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.
கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர் சங்க கூட்டுக்கமிட்டி எடுத்த முடிவுப்படி நாளை முதல் விசைத்தறிகளை நிறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யப்படும்.
அவிநாசி வட்டாரத்தில் உள்ள அனைத்து சங்க உறுப்பினர்களும் தங்களது தறிகளை நிறுத்தி போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். சொந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் தறிகளை நிறுத்தி ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் அவிநாசி வட்டாரத்தை சேர்ந்த விசைத்தறியாளர்கள் பங்கேற்றனர். இதேபோல் தெக்கலூர் மற்றும் புதுப்பாளையம் வட்டாரத்திலும் நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.