பி.எஸ்.என்.எல் முறைகேடு வழக்கு: சன் டிவி ஊழியர்களிடம் சிறையில் விசாரணை நடத்த சிபிஐ-க்கு அனுமதி
சென்னை: பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் தயாநிதி மாறனின் முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் உள்ளிட்ட 3 பேரிடம், சிறையில் விசாரணை நடத்த சிபிஐக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதிமாறன் இருந்தபோது அவரது வீட்டில் இருந்த 323 பி.எஸ்.என்.எல். தொலை பேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், அவரது முன்னாள் கூடுதல் தனிச் செயலாளர் வி.கவுதமன், சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி எஸ்.கண்ணன், எலக்ட்ரிஷியன் ரவி ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன.
மூன்று பேரின் நீதிமன்றக்காவல் பிப்ரவரி 4ஆம் தேதியுடன் முடிந்ததால், சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது நீதிமன்றக் காவலை 18-ஆம் தேதி வரை நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சிறையிலே அவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி சிபிஐ நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் புதன்கிழமையன்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கவுதமன் உள்ளிட்ட மூன்றுபேர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை சிபிஐ முதன்மை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி இந்த மனுக்களை வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "கவுதமன் உள்பட 3 பேரிடம் புழல் மத்திய சிறையில், சிறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சிபிஐ விசாரணை நடத்தலாம்" என்று உத்தரவிட்டார்.