வாசனின் ‘கூட்டணி’ முடிவால் தமாகாவில் உட்கட்சிப் பூசல்.. ‘அம்மா’வைச் சந்திக்க பாலசுப்பிரமணியன் முடிவு
சென்னை: மக்கள் நலக்கூட்டணியுடன் வாசன் கூட்டணி வைத்ததற்கு தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார் தமாகா மூத்தத் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.
உட்கட்சிப் பூசலால் காங்கிரஸில் இருந்து விலகிய ஜி.கே.வாசன் தனது ஆதரவாளர்களுடன் இணைந்து மீண்டும் தமாகாவை உருவாக்கினார். கட்சி தொடங்கியது முதல் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த வாசன், சட்டசபைத் தேர்தலில் அக்கட்சியுடனேயே கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று தேமுதிக - மக்கள் நலக்கூட்டணியோடு கூட்டணி சேர்வதாக அறிவித்தார் வாசன். அந்தக் கூட்டணியில் தமாகாவிற்கு 26 சீட்டுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானபோது தமாகா மூத்த துணைத் தலைவர்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் அதில் பங்கேற்கவில்லை. இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பீட்டர் அல்போன்ஸ், இக்கூட்டணியில் தனக்கு உடன்பாடில்லை எனத் தெரிவித்தார். மேலும், இந்தக் கூட்டணி அமைப்பதால் தமாகா தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறாமல் போகும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன். அப்போது அவர், ‘அதிமுகவுடன் தமாகா கூட்டணி வைப்பதையே தான் விரும்புவதாகவும், விஜயகாந்துடன் கூட்டணி வைப்பதில் தனக்கு உடன்பாடில்லை' என்றும் கூறினார். மேலும், விரைவில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் ஒதுக்க கேட்டிருப்பதாகவும், அந்தச் சந்திப்பிற்குப் பின் இது குறித்து மேலும் பேசுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பீட்டர் அல்போன்ஸ் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியனின் இந்தப் பேச்சுக்கள் மூலம், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமாகா இணைந்தது அக்கட்சித் தலைவர்களிடையே உட்கட்சிப் பூசலை உருவாக்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.