டிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்?
சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பல எம்எல்ஏக்கள் வரவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்களாவது தேவை என்பதால் தகுதி நீக்கத்திற்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் 7 பேராவது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்துவிட்டால், ஹைகோர்ட்டில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆளும் தரப்புக்கு கவலை இருக்காது.
இந்த நிலையில், தினகரன் தரப்பில் இருந்து 8 பேர் எடப்பாடி பக்கம் வந்துவிட்டதாக ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தீர்ப்பு தாமதமாகிக்கொண்டே போவதால் எம்எல்ஏக்கள் அந்தஸ்து இன்றி இருப்பது, அதிமுக கட்சியின் அங்கீகாரம் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுவிட்டது போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
சிலர் புறக்கணிப்பு
இதனிடையே இன்று ஹைகோர்ட்டில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில், முன்னதாக தினகரன் தனது இல்லத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஏற்கனவே வெளியாகியிருந்த பிளவு செய்திக்கு றெக்கை முளைத்தது.
பல காரணங்கள்
இதுபற்றி தினகரனே விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இந்த கட்சியை காப்பாற்ற சசிகலாவால்தான் முடியும் என்பதற்காக எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை என்று, என்னோடு உள்ளனர். அரசு கூட இருந்திருந்தால் அவர்களுக்கு பல சலுகைகள் கிடைத்திருக்கும். அதையெல்லாம் புறக்கணித்து எங்களோடு நிற்கிறார். வெற்றிவேல் இப்போது ஜெர்மனிக்கு சென்றுள்ளார். கென்னடி என்னுடைய உடன் பிறந்த சகோதரர் மாதிரி. அவரது குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். முத்தையா என்னுடைய அண்ணன் மாதிரி. அவரது வீட்டில் புதுமனை புகு விழா. நான்தான், அதை முடித்துவிட்டு வாருங்கள் என கூறினேன்.
நானே சொன்னாலும் போகமாட்டார்கள்
ஒருநாள் ஒருவர் வரவில்லை என்பதற்காக அதை பெரிதுபடுத்தாதீர்கள். நானே போகச்சொன்னாலும் அவர்கள் போகமாட்டார்கள் என்பதுதான் உண்மை. விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஷ்வரி, இன்று வீட்டை மாற்றிக்கொண்டிருந்தார். எனவே நான் வர வேண்டாம் என்று தெரிவித்தேன். ஆனால் ஊடகங்கள் தப்பாக சித்தரிக்கிறார்கள், எனவே நான் வந்துவிடுகிறேன் என காலையில் விமானத்தை பிடித்து இங்கே ஓடி வந்தார். நாங்கள் எல்லாம் போராளிகள். ஒரே குடையின்கீழ் இயங்குகிறோம். இனிமேல் தயவு செய்து எங்கள் குழுவிற்குள் பிளவு என எழுத வேண்டாம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.
சட்டம் ஒரே மாதிரி
மேலும், 2 மாதம் முன்பாக, புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை சரியில்லை என்று கூறிய ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இன்று, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்துவிட்டார். சட்டம் எல்லா இடமும் ஒரே மாதிரிதானே இருக்கும். இது கடவுளுக்குதான் வெளிச்சம். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.