கூடும் செல்பி மோகம்.. பெருகும் உயிரிழப்பு.. ரெயில் நிலையங்களில் செல்பி எடுத்தால் இனி பைன்தான்!
செல்பி எடுத்தால் இனி அபராதம் என ரெயில்வே அறிவித்துள்ளது.
Recommended Video
வேலூர்: ரெயில்வே போலீசார் அதிரடி நடவடிக்கை பல செல்பி பிரியர்களை கலக்கமடைய வைத்துள்ளது.
உலகமெங்கும் வயது வித்தியாசம் இன்றி இன்று பரவியுள்ள ஒரு வியாதி செல்பி. ஆற்றங்கரையில் நின்றால் செல்பி, அருவிமேல் நின்றால், நடுக்கடலில் நின்றாலும் செல்பிதான். இப்படி எடுக்கும்போது எவ்வளவோ பேர் உயிரிழந்து வருவதையும் கண்கூடாக பார்த்தும் வருகிறோம். தண்டவாளத்தில் ரெயில் வரும்போதும், ஓடிக்கொண்டிருக்கும் ரயிலின் வெளியேயும் தலையை நீட்டிக் கொண்டு கூட செல்பி எடுப்பார்களா? இதில்கூட எத்தனையோ பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்கள்
இந்த காட்சிகளையெல்லாம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வரும்போது எவ்வளவோ பேர் வீடியோவாக பார்த்தும்கூட, மீண்டும் மீண்டும் இந்த உயிரிழப்பின் எண்ணிக்கையை குறைக்க முடியவில்லை. அதனால், இதை தடுக்க ஒருவழியாக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து விட்டது. இதுபோன்று உயிரையே பணயம் வைத்து செல்பி மோகம் பிடித்து ஆடும் இளைஞர்களுக்காகவே ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
குறிப்பாக காட்பாடி, ஜோலார்பேட்டை, அரக்கோணம் என ரெயில் நிலையங்களில் யாரெல்லாம் செல்பி எடுக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் 2 ஆயிரம் ரூபாய் அதிரடியாக விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் நிலையங்களில் எல்லாம் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ரெயில் தண்டவாளம், மற்றும் ரெயில் படிக்கட்டு நின்று செல்பி எடுத்தாலே ஸ்பாட் ஃபைன்தான் என ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் பல செல்பி பிரியர்கள் கலக்கமடைந்துள்ளனர். அதேபோல ரயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர பிற இடங்களில் குப்பையை வீசினால் 500 ரூபாய் அபராதம். இவை இரண்டுமே இன்று முதல் அமலுக்கும் வந்துவிட்டது.
செல்பி எடுக்க கூடாது எனவும் மீறி எடுத்தால் அபராதம் என ரெயில்வே தரப்பு சொல்லிவிடவும், இது பல செல்பி பிரியர்களை கலக்கமடைய செய்துள்ளது. இனியாவது செல்பி மோகம் குறையுமா என்று பார்ப்போம். இதேபோல சுற்றுலா தளங்களிலும் இதே நடைமுறையை பின்பற்றினால் விலைமதிப்பற்ற ஏராளமானோர் உயிர் காக்கப்படுவது நிச்சயம்.