பயப்படாதீங்க, பருவ மழை இயல்பாகவே இருக்கும் - எஸ்.ஆர். ரமணன்
Recommended Video
சென்னை: வட கிழக்குப் பருவ மழை இயல்பாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன். மிக கன மழைக்காலங்களில் மட்டும் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று முன்னாள் வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
வட கிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளது. இதுதொடர்பாக பலவேறு கணிப்புகள் வெளியாகி வருகின்றன. பயமுறுத்தும் படியான கணிப்புகளையும் பலர் வெளியிடுகின்றனர்.
இந்த நிலையில் வருகிற 7ம் தேதி மிக மிக கன மழை இருக்கும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஒரு விதமான படபடப்பு இருப்பது உண்மைதான்.
இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு எஸ்.ஆர்.ரமணன் அளித்த பேட்டியின்போது விளக்கினார். அவர் கூறுகையில், இந்த வருடம் வட கிழக்குப் பருவ மழையானது இயல்பு நிலையில் இருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஒவ்வொரு நிறுவனமும் ஒரு கணிப்பை கூறியுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இயல்பு நிலை அல்லது அதற்கு மேலான அளவில் மழை இருக்கலாம்.
கடந்த பல மாதமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை இல்லை. எனவே கன மழை வந்தாலும் கூட பூமியே பாதி நீரை ஈர்த்துக் கொள்ளும். எனவே பெரிய அளவிலான பாதிப்பை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதேசமயம், தொடர்ந்து கன மழை பெய்தால் நாம் கவனமாக இருந்தாக வேண்டும். அதற்குறிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
கன மழைக்காலங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்படுவது இயல்புதான். அந்த வகையில் மிக கன மழை பெய்யக் கூடிய நாட்களில் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்றார் ரமணன்.