பருவ மழை கேரளாவில் தொடங்கி விட்டது... வானி்லை மையம் குழப்புவதாக சொல்கிறார் எஸ்.ஆர்.பி!
கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களைக் குழப்பி வருகிறது என்று கூறியுள்ளார் அதிமுக ராஜ்யசபா எம்.பி. எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம்.
கோவை வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக சில கருத்துக்களைக் கூறினார். வழக்கமாக அரசியல்வாதிகள் இதுபோல பேசுவதில்லை என்பதால் எஸ்.ஆர்.பியின் பேச்சு ஆர்வத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.
எஸ்.ஆர்.பி கூறுகையில் தென் மேற்குப் பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களைக் குழப்பம் வகையில் தகவல்களை கூறி வருகிறது. முதலில் ஜூன் 1ம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்கள். பிறகு ஜூன் 7ம் தேதி தொடங்கும் என்றார்கள். இப்போது ஜூன் 9ம் தேதி தொடங்கும் என்று கூறியுள்ளனர்.
உண்மையில் கேரளாவில் தென் மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது. அங்கு மழை பெய்து வருகிறது என்றார் எஸ்.ஆர்.பி. மழை தொடர்பாக வானிலை மையம் குழப்புவதாக மூத்த அரசியல் தலைவர் குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் சிக்கியது தொடர்பாகவும் கருத்து தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பி. இதுகுறித்து அவர் கூறுகையில், கோவையில் ரூ. 5670 கோடி பணம் கிடைத்தது தொடர்பாக எந்தவிதமான விசாரணை நடந்தாலும் அதை நாங்கள் ஆட்சேபிக்கப் போவதில்லை. அது முழுக்க முழுக்க வங்கியின் பணம். அது தங்களுடைய பணம் என்று ஸ்டேட் பாங்க் கூறி விட்டது. எனவே இதுதொடர்பாக யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். அது தொடர்பாக எங்களுக்கு எந்தத் தயக்கமும் இல்லை என்றார் அவர்.