அட்டகாசத்தை மீண்டும் தொடங்கிய இலங்கை கடற்படை- புதுகை மீனவர்கள் 16 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 16 பேர் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று அதிகாலை மீன் துறை அலுவலக அனுமதியுடன் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் இந்திய கடல் எல்லையான கோடியக்கரையின் தென் கிழக்கு பகுதியான நெடுந்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு மின்னல் வேகத்தில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான குட்டி ரோந்து கப்பல்கள் அதிக ஒளியை பாய்ச்சியவாறு வந்தது. இதனை பார்த்ததும் தமிழக மீனவர்கள் சிலர் வலைகளை சுருட்டிக் கொண்டு பயத்தில் அங்கிருந்து புறப்பட்டனர். 3 விசைப்படகுகளை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சுற்றி வளைத்தனர்.
உடனே அவர்களின் படகுகளில் தாவிக்குதித்த இலங்கை கடற்படையினர் இது எங்கள் நாட்டு எல்லை, இங்கு வந்து மீன்பிடிக்க உங்களுக்கு என்ன தைரியம். பலமுறை எச்சரித்தும் இங்கு ஏன் மீன்பிடிக்க வருகிறீர்கள் என்று கூறி அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை பறித்துக்கொண்டனர். அத்துடன் அவர்களின் வலைகளையும் அறுத்து சேதப்படுத்தி உள்ளனர்.
பின்னர் அந்த 16 மீனவர்களையும் 3 விசைப்படகுகளுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். அவர்களை இலங்கையின் காங்கேசன்துறை முகாம் அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட இடம் அருகே மீன்பிடித்து தப்பி வந்த மற்ற மீனவர்கள் கூறுகையில், நமது மீனவர்கள் சர்வதேச அளவில் தடை விதிக்கப்பட்ட இரட்டை மடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாகவும், எல்லை தாண்டி வந்ததாகவும் கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றுள்ளனர் என தெரிவித்தனர்.
சிறை பிடிக்கப்பட்ட மீனவர்களின் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இதற்கிடையே கைதான மீனவர்களின் சொந்த கிராமமான ஜெகதாபட்டினத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் நாளை முதல் திருவிழா தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவையொட்டி மீனவர்கள் கடலுக்கு செல்வதில்லை.
ஆனால் முன்னதாக இன்றே ஜெகதாபட்டினம் மீனவர்கள் 16 பேர் சிறை பிடிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பும், சோகமும் நிலவுகிறது. சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்படுவார்களா அல்லது சிறையில் அடைக்கப்படுவார்களா என்பது பிற்பகலில் தான் தெரிய வரும்.