இந்தியாவின் மீன் ஏற்றுமதிக்கு குந்தகம் விளைவிக்கும் இலங்கை சட்டம்... மு.க.ஸ்டாலின் கொந்தளிப்பு
இலங்கை கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தால் இந்திய மீன் ஏற்றுமதித் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: எல்லை தாண்டி மீன்பிடித்தால் ரூ.10 கோடி வரை மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று இலங்கை அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இது இந்திய மீன் ஏற்றுமதிக்கு பெரும் குந்தகம் விளைவிக்கும் என்று கூறியுள்ள திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், இலங்கை அரசுக்கு கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், " இலங்கையின் சட்டத்தால் இந்தியாவின் மீன் ஏற்றுமதிக்கு குந்தகம் ஏற்படும் ஆபத்துள்ளது. எனவே, இலங்கை சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்து தொழில் செய்ய உரிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும். " என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், " தரம் தாழ்ந்த விமர்சனங்களை முதலமைச்சரே பதிவு செய்திருப்பது சட்டமன்ற வரலாற்றில் கருப்பு அத்தியாயம். காவல்துறை மான்யம் மீதான பதிலால், முதல்வர்கள் பாதுகாத்த அரசியல் நாகரிகத்தை தூக்கியெறிந்துவிட்டார்" என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
"அடிப்படை ஆதாரமின்றி விவாதத்தில் ஈடுபடுபவர்கள் தனிப்பட்ட தாக்குதலில் தான் முடிப்பார்கள். மேலும், மீனவர் பிரச்சனை, மாட்டிறைச்சி தடை, ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்றும் ஸ்டாலின் அந்தக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.