இலங்கையில் தமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு.. பொங்கலுக்கு வர முடியாது.. சோகத்தில் குடும்பத்தினர்
நாகப்பட்டினம்: இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்களின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுடைய குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த 29 மீனவர்கள் கடந்த மாதம் 31 ஆம் தேதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டனர். அவர்களது 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திரிகோணமலை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது காவல் நேற்று முடிவடைந்ததை தொடர்ந்து 29 மீனவர்களும் திரிகோணமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களின் காவலை வருகிற 25 ஆம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து 29 மீனவர்களும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். பொங்கல் பண்டிகைக்கு ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.