கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை: இலங்கை அமைச்சர் பேட்டி
சென்னை: இந்திய நாடாளுமன்ற ஒப்புதலோடு பெறப்பட்ட கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை என இலங்கை அமைச்சர் லட்சுமண் கிரியல்லா தெரிவித்துள்ளார்.
இலங்கையிலிருந்து நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்திறங்கினார் இலங்கை தோட்ட தொழில் அமைச்சர் லட்சுமண் கிரியல்லா. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:-
இந்திய பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு வந்து சென்றபின்னர் இருநாடுகளுக்கான உறவு மேம்பட்டு உள்ளது. இதனால் இருநாட்டு மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இந்தியா-இலங்கை மீனவர்களுக்கு இடையே 3 கட்ட பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இந்திய மீனவர்கள் சில கோரிக்கைகளை வைத்து உள்ளனர். அவற்றை இலங்கை அரசு பரிசீலித்து வருகிறது. இலங்கையில் புதிய அரசு பதவி ஏற்றபின் சிறுபான்மை மக்களுக்கு அதிக அக்கறையுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. தமிழர் பகுதியில் உள்ள ராணுவம் படிப்படியாக குறைக்கப்படும்.
தமிழர் பகுதியில் ராணுவத்திற்கு போக மீதம் உள்ள இடங்கள் வழங்கப்படும். இந்திய மீனவர்கள் கடல் தாண்டி மீன் பிடிக்கின்றனர். அதுபோல் சில நேரங்களில் இலங்கை மீனவர்களும் கடல் தாண்டி வருகின்றனர். கடலில் எல்லையை நிர்ணயம் செய்ய முடியாது. இந்திய நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுத்தான் கச்சத்தீவு இலங்கையிடம் வழங்கப்பட்டது. சிலர் அரசியல் ஆதாயத்திற்காக கச்சத்தீவை திரும்ப பெற வேண்டும் என்று கூறுகின்றனர். கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும் பேச்சுக்கே இடமில்லை' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.