தமிழக மீனவர்களை நிர்வாணப்படுத்தி இலங்கை கடற்படை கொடூர தாக்குதல்
தமிழக மீனவர்களின் ஆடைகளை கழற்றி இலங்கை கடற்படையினர் இரும்புக்கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
நாகப்பட்டிணம்: நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்பு கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
மீனவர்களின் ஆடைகளை அவிழ்த்து தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர், புகையிலையை வாயில் திணித்து விட்டு உணவுகளையும் எடுத்து சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது.
பாம்பனைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் கோடியக்கரை கடற்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 பேரின் ஆடைகளை அவிழ்த்து இரும்பு கம்பியால் அடித்தனர்.
இதே போல மற்றொரு நாட்டுப்படகில் இருந்த 8 மீனவர்களில் 3 பேரின் ஆடைகளை களைந்து இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளனர்.
கடந்த 18ஆம் தேதி இந்திய கடற்பகுதி எல்லைக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியுள்ளனர். அங்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் 200 படகுகள் மீது தாக்குதல் நடத்தினர். சில படகுகளுக்குள் புகுந்த இலங்கை கடற்படையினர் அங்கிருந்த மீன்பிடி சாதனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த நிலையில் கோடியக்கரை அருகே மீண்டும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி உணவுப்பொருட்களையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச்சென்றுவிட்டதால் ஒரே நாளில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.
தாக்குதல் பற்றி கருத்து கூறிய மீனவர்கள், புகையிலையை இலங்கை கடற்படையினர் வாயில் திணித்ததில் ஒரு மீனவர் மயங்கி விழுந்தார். இலங்கைப் படையினர் உணவுப் பொருட்களையும், மீன்களையும் எடுத்துச் சென்றதாகவும் குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவதால் மீனவர்கள் பதற்றமடைந்துள்ளனர்.