இலங்கை கடற்படை அட்டூழியம்: நாகை மீனவர்கள் 8 பேர் கைது: படகுகளும் சிறைபிடிப்பு
வேதாரண்யம்: கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகை மாவட்ட மீனவர்கள் 8 பேரையும் அவர்களது இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்துச் சென்றனர்.
நாகை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டையைச் சேர்ந்த மீனவர்கள் சின்னையன் (45), வசந்தராஜன் (19), ராசேந்திரன் (45), வேலு (65). கோடியக்கரையில் தாற்காலிகமாகத் தங்கி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்கள் நால்வரும் கோடியக்கரை படகுத்துறையில் இருந்து கண்ணாடியிழை படகு ஒன்றில் செவ்வாய்க்கிழமை பகல் கடலுக்குச் சென்றனர். இதேபோல, வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் பாலமுருகன் (25), குட்டியாண்டி (45), கவிநேசன் (20), ராசேந்திரன் (45) ஆகிய நால்வரும் ஆறுகாட்டுத்துறையில் இருந்து மற்றொரு கண்ணாடியிழை படகில் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, புதன்கிழமை காலை அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரையும் அவர்களது படகுகளுடன் சிறைபிடித்துச் சென்றனர். கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை தளத்தில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த பாதுகாப்புப் பிரிவு போலீஸார், மீன்வளத் துறையினர் கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறையில் விசாரணை மேற்கொண்டனர்.