இலங்கை கடற்படை அட்டகாசம்: தமிழக மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்றுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 109 விசைப்படகுகளிலும், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 241 விசைப்படகுகளிலும் 1, 400 மீனவர்கள் சனிக்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்க கிளம்பினர்.
இதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த கலைமதி என்பவரின் விசைப்படகில் இருந்த விக்னேஷ், பழனி, மணிகண்டன், செல்வநாதன், திலீப் ஆகியோரும், கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த ஜான்பீட்டரின் படகில் இருந்த கோட்டைச்சாமி, மெரிட்சன், ஜெமினி, பரமசிவம் ஆகியோரும் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அந்த 9 மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படை தளத்தில் வைத்து விசாரிக்கப்பட்ட பிறகு 9 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை வரும் 12ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
9 மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துச் சென்றுள்ளது வேதனை அளிப்பதாக புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க தலைவர் குட்டியாண்டி தெரிவித்துள்ளார். இதுவரை சிறைபிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப் பெரிய போராட்டம் நடத்த வேண்டி இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.