தமிழக மீனவர்கள் 10 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: நெடுந்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைபட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சிறைபிடித்தனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களையும், அவர்களின் படகையும் சிறைபிடித்தனர் இலங்கை கடற்படையினர். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. கடலுக்கு செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவதும், சிறைபிடித்து அழைத்துச் செல்வதும் தொடர்கதையாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.