இருள்சூழ்ந்த நடுக்கடலில் 10 நிமிடம் நீடித்த சரமாரி துப்பாக்கிச்சூடு.. மீனவரின் திகில் அனுபவம்
இலங்கை கடற்படையினர் சுமார் 10 நிமிடம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக இதனை அனுபவித்த மீனவர் ராஜா தெரிவித்துள்ளார்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினர் சுமார் 10 நிமிடம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதாக இதனை அனுபவித்த மீனவர் ராஜா தெரிவித்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் என மற்றவர்களை அறிவுறுத்திய பிரிட்ஜோதான் இதற்கு பலியானதாகவும் அவர் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
இந்திய எல்லைக்குள் நேற்று முன்தினம் இரவு அத்துமீறி நுழைந்த இலங்கை கடற்படையினர் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பிரட்ஜோ என்ற 22 வயது மீனவர் பலியானனர்.
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் தப்பி கரைசேர்ந்த ராஜா என்ற மீனவர் துப்பாக்கிச்சூடு குறித்த தனது திகில் அனுபவம் குறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது,
இரவு 9 மணிக்கு வந்தனர்
நாங்கள் கச்சத்தீவு அருகே இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தான் மீன்பிடித்துக்கொண்டிருந்தோம். இரவு சுமார் 9 மணி அளவில் அங்கு 4-க்கும் மேற்பட்ட அதிவேக ரோந்து படகுகளில் இலங்கை கடற்படையினர் வந்தனர்.
பிரிட்ஜோதான் அறிவுறுத்தியது
அவர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடியே எங்கள் படகை நோக்கி வந்தனர்.
பிரிட்ஜோ தான் இதனை முதலில் பார்த்து, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுடுகின்றனர். அனைவரும் பாதுகாப்பாக மறைந்து கொள்ளுங்கள் என்று எங்களிடம் தெரிவித்தான்.
10 நிமிடம் சரமாரியாக சுட்டனர்
சுமார் 10 நிமிடம் தொடர்ந்து எங்கள் படகு மீது இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
எங்களிடம் பேச முயன்றான்
அவர்கள் சென்றதும் நாங்கள் வெளியே வந்து பார்த்தபோது பிரிட்ஜோவின் கழுத்தில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தான். உயிருக்கு போராடிய அவன் எங்களிடம் பேச முயன்றான்.
கரையை நெருங்கும் வரை உயிர் இருந்தது
ஆனால் அவனால் பேச முடியவில்லை. இதேபோல மற்றொரு மீனவரான சரோனுக்கு கால் மற்றும் கைகளில் குண்டு காயங்கள் இருந்தன. அந்த நேரத்தில் எங்களுக்கு பதற்றமாக இருந்ததால் உடனடியாக அவர்களை காப்பாற்ற வேண்டும் என்று வேகமாக கரைக்கு திரும்பினோம். கரையை நெருங்கும்வரை பிரிட்ஜோவுக்கு உயிர் இருந்தது. இவ்வாறு அந்த மீனவர் ராஜா கூறினார்.