எம்.கே. நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழர்!
சென்னை: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சென்னை நிகழ்ச்சி ஒன்றில் செருப்பால் அடித்ததால் கைது செய்யப்பட்ட பிரபாகரன், இலங்கையைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர் என தெரியவந்துள்ளது.
சென்னையில் ஈழ அகதிகள் குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்ள எம்.கே. நாராயணன் நேற்று வருகை தந்திருந்தார்.
இந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் நாராயணனுக்கு கை கொடுக்க நெருங்கிச் சென்று வலது கையால் செருப்பை எடுத்து, இலங்கை படுகொலைக்கு காரணமே நீதான் என கூறியபடியே கழுத்து, முகம், தலை என பல இடங்களில் எம்.கே.நாராயணனை சரமாரியாக அவர் அடித்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நாராயணனை செருப்பால் அடித்த பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
பிரபாகரனின் தந்தை மெய்யப்பன், இலங்கை மலையகப் பகுதியில் வசித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஆவணங்கோட்டை இவரது சொந்த ஊர்.
பிரபாகரன் சிறுவயது முதலே தமிழகத்தில் உறவினர்களுடன்தான் வசித்து வருகிறார். தமிழகத்தில் ஈழத் தமிழர் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு சென்று வருபவர்.
சென்னை கோயம்பேட்டில் பிரபாகரன் அறை எடுத்து தங்கியிருந்துதான் இந்த நிகழ்ச்சிக்கு சென்றிருக்கிறார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கோயம்பேட்டில் பிரபாகரன் தங்கி இருந்த அறையில் சோதனை நடத்திய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.