குற்றவாளிகளிடம் எந்த மாதிரி விசாரணை என கேட்க கூடாது: ஐ.நா அறிக்கை பற்றி பத்திரிகையாளர் 'பளிச்'
சென்னை: குற்றச்சாட்டுக்கு உட்பட்டோரிடம் எந்த மாதிரி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குற்றவாளிகளிடமே கேட்க வேண்டியதில்லை என்று இலங்கையில் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல் குறித்து ஆவணப்படங்கள் வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தெரிவித்துள்ளார்.
Sri Lanka's Killing Fields மற்றும் No Fire Zone ஆகிய டாக்குமென்டரிகளை வெளியிட்ட பத்திரிகையாளர் கல்லம் மேக்ரே தி நியூஸ் மினிட் என்ற தளத்துக்கு அளித்துள்ள பேட்டியின் முக்கிய அம்சங்கள்:
இந்த அறிக்கை வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நமக்கு தெரிந்த தகவலில் மேலும் சில தகவலை சேர்த்துள்ளதோடு, நமது தகவல்களை உறுதி செய்துள்ளது இவ்வறிக்கை. நான் வெளியிட்ட ஆவணப் படங்களை உண்மையில்லை என்று மறுத்த இலங்கை அரசுக்கு ஐ.நா.அறிக்கை மற்றொரு பின்னடைவாகும்.
ஐ.நா. அறிக்கையில் சில அம்சங்கள் விட்டுப்போயுள்ளது உண்மைதான். ஏனெனில் குற்றங்கள் மிக அதிக அளவில் நடந்துள்ளது. அதில் ஒரு சில விட்டுப்போயுள்ளன. இப்போதுள்ள முக்கிய பிரச்சினை, ஐ.நா. இதை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதுதான். சர்வதேச விசாரணைதான் இப்பிரச்சினைக்கு தீர்வாக முடியும். குற்றவாளியிடம் எந்த மாதிரி விசாரணை நடைபெற வேண்டும் என்று கேட்க முடியாது.
புதிய அரசு சில விவகாரங்களில் ராஜபக்சே அரசைவிட மாறுபட்டிருக்கலாம். ஆனால் தமிழர்களுடனான உறவில் இரு அரசுகளுக்கும் பெரிய மாற்றம் இல்லை. இலங்கையில் மாற்றம் வந்துள்ளது, ஆனால் தமிழர்களுக்கு மாற்றம் வரவில்லை. காணாமல் போன தமிழர்கள் நிலை பற்றி இன்னும் தெரியவில்லை, பறிக்கப்பட்ட நிலங்கள் திரும்ப தரப்படவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.