கைதான ராமச்சந்திரா பல்கலை. வேந்தருக்கு 'நெஞ்சு வலி' வந்தது- ஜாமீன் கோருகிறார்
சென்னை: வெளிநாட்டு கார் இறக்குமதியில் முறைகேடு செய்து சிபிஐயால் கைது செய்யப்பட்ட சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகத்தின் வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறியதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
மறைந்த ராமசாமி உடையாரின் மகனான இவர் பெருமளவில் வரி ஏய்ப்பு செய்து கார்களை இறக்குமதி செய்து வந்த அலெக்ஸ் சி.ஜோசப்பிடம் இருந்து கார்களை வாங்கியிருந்தார். இவருக்கும் வரி ஏய்ப்பில் தொடர்பு இருப்பதாகக் கூறி இவரை சிபிஐ கைது செய்தது.
சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி வீட்டுக்கு கொண்டு சென்று ஆஜர்படுத்தப்பட்ட இவரை ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் செவ்வாய்க்கிழமை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, தனக்கு நெஞ்சு வலிப்பதாக வெங்கடாசலம் கூறியதால், அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் சிபிஐ அதிகாரிகள்.
இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வெங்கடாசலம் மனு தாக்கல் செய்துள்ளார். தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும், தன்னை ஜாமீனில் விடுவிப்பதால் இந்த வழக்கின் விசாரணை எவ்விதத்திலும் பாதிக்காது என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் முதன்மை நீதிபதி ஜெ.கிருஷ்ணமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிலளிக்க தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் கோரினர். இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) நீதிபதி ஒத்தி வைத்தார்.
மேலும், வெங்கடாசலத்தை தங்களது காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளிக்கக் கோரி சி.பி.ஐ. அதிகாரிகள் சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவும் இன்று விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்ற காவல் நீட்டிப்பு
இதற்கிடையே, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வெங்கடாசலத்தின் நீதிமன்றக் காவலை மே 19ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். ஸ்டான்லி மருத்துவமனைக்கு செவ்வாயன்று நேரில் சென்ற நீதிபதி, இந்த காவல் நீட்டிப்பு உத்தரவைப் பிறப்பித்தார்
இந்த வழக்கில் அலெக்ஸ் ஜோசப் தவிர மேலும் 21 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளது சிபிஐ. அலெக்ஸ் தவிர விஜயதேவன் பாஸ்கரன், ஜான் பாஸ்கோ, ஜோசப் டேனியல், பொங்கியண்ணன், சண்முகசுந்தரம், ராமநாதன், ரவீந்திரன், விஜயேந்திர சாமுவேல் ஆகியோரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.