167 ஆவது முறையாக தேர்தல் களம் கண்ட "தேர்தல் மன்னன்"!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள், டிராபிக் ராமசாமியின் லிஸ்ட்டில் தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் சேர்ந்துள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு முதல் வேட்பாளராக சேலத்தைச் சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் 167 ஆவது முறையாக தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "சேலம் மாவட்டம் ஆத்தூர்தான் என்னுடைய சொந்த ஊர். தற்போது மேட்டூரில் உள்ளேன். கடந்த 1988 ஆம் ஆண்டு முதல், ஜனாதிபதி துணை ஜனாதிபதி, எம்.பி, எம்.எல்.ஏ பதவிக்காக 166 முறை போட்டியிட்டு உள்ளேன்.
தற்போது ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் 167 ஆவது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த எம்.பி தேர்தலின் போது பிரதமர் மோடியை எதிர்த்து வதோதரா தொகுதியில் போட்டியிட்டேன். இதுவரை 166 தேர்தல்களில் போட்டியிட்ட நான் சட்டசபை தேர்தலில் மேட்டூர் தொகுதியில் அதிகபட்சமாக 6773 ஓட்டு பெற்றுள்ளேன்.
ஜனநாயக நாட்டில் நடைபெறும் தேர்தலில் பொதுமக்கள் யாரும் யாரையும் எதிர்த்து போட்டியிடலாம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே தொடர்ந்து தேர்தல்களில் போட்டியிடுகிறேன்.
காகா ஜோகிந்தர் சிங் 300 தேர்தலில் போட்டியிட்டு (அட ஆண்டவா!) லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். அவரை முறியடிக்க வேண்டும். தேர்தல் போட்டிக்காக 20 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில் டிராபிக் ராமசாமி, தேர்தல் மன்னன் என்று ஸ்ரீரங்கம் தேர்தல் சுவாரசியங்களுக்கு பஞ்சமில்லைதான்!