வைகுண்ட ஏகாதசி: நாளை சொர்க்கவாசல் திறப்பு- ஸ்ரீரங்கத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு
பெருமாள் ஆலயங்களில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளதால் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திருச்சி: வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு தமிழகம் முழுவதும் பெருமாள் ஆலயங்களில் நாளை அதிகாலை நடைபெற உள்ளது. ஸ்ரீ ரங்கத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்ற சிறப்புக் குரியதுமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 18ஆம் தேதியன்று தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நாளை காலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு அதிகாலை 3.45மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து ரத்தின அங்கி, பாண்டியன் கொண்டை, கிளிமாலை உட்பட பல்வேறு திருஆபரணங்கள் அணிந்து புறப்படுகிறார். தங்கக் கொடி மரத்தை சுற்றி துரைப்பிரகாரம் வழியாக சொர்க்கவாசல் எனப்படும் பரம பதவாசலை அடைகிறார்.
3 அடுக்கு பாதுகாப்பு
சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலிலுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 42 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 11 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 4000 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் தரிசனம்
சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மயிலாப்பூர் மாதவ பெருமாள் கோவில், கேசவ பெருமாள் ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்புக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலையில் 4 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளதால் பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சொர்க்கவாசல் திறப்பு
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் ரங்கநாதர் குடவரைக் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பு வாய்ந்தது. நாளை அதிகாலை 4 மணிக்குள் திருப்பள்ளி எழுச்சி மற்றும் நித்ய பூஜை நடைபெற்று வைகாச ஆகம முறைப்படி பரமபத வாசல் என்னும் சொர்க்க வாசல் காலை 4.30 மணிக்கு மேல் 5 மணிக்குள் திறக்கப்படவுள்ளது. இரவு 10 மணி அளவில் சொர்க்க வாசல் நடை சார்த்தப்படும்.
பக்தர்களுக்கு லட்டு பிரசாதம்
வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, பக்தர்களுக்குப் பிரசாதமாக 54,000 லட்டுகள் வழங்கப்படவுள்ளன. 54,000 லட்டுகளைத் தயாரிக்க 800 கிலோ கடலை மாவு, 16,00 கிலோ சர்க்கரை, 225 கிலோ நெய், எண்ணெய் 49 கிலோ, முந்திரி 50 கிலோ, திராட்சை 30 கிலோ, கல்கண்டு 25 கிலோ, லவங்கம் 2 கிலோ பயன்படுத்தப்படுகிறது.