நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவுமில்லை... இயற்கையானதே!
நடிகை ஸ்ரீதேவியின் தலையில் ஆழமான காயம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் இயற்கையானதே என்று துபாய் போலீஸ் கூறியுள்ளது.
Recommended Video
சென்னை: துபாயில் ஓட்டல் குளியறை பாத்டப் நீரில் மூழ்கி மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் தலையில் காயம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் இயற்கையானதுதான் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனையடுத்து ஸ்ரீதேவி மரணத்தில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த மர்மமும், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
துபாயில் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகை ஸ்ரீதேவி சென்றிருந்த போது, அங்கு திடீரென மரணமடைந்தார். சனிக்கிழமையன்று மரணமடைந்த ஸ்ரீதேவியின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டது.
துபாய் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைக்காததால் ஸ்ரீதேவி உடல் மும்பை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
தடயவியல் சோதனை
துபாய் சட்டவிதிமுறைகள்படி வெளிநாட்டவர் யாரவது மருத்துவமனைக்கு வெளியே இறந்துவிட்டால், மரணம் குறித்து காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தடயவியல் சோதனை நடத்தப்படும்.
அதன் பின் எம்பாமிங் செய்யப்பட்டு, அவரது நாட்டுக்கு அனுப்பப்படும், அந்த நடைமுறைதான் ஸ்ரீதேவி விவகாரத்திலும் பின்பற்றப்பட்டது.
ஸ்ரீதேவியின் மரணம்
திருமண நிகழ்ச்சிக்கு பின்னர் ஸ்ரீதேவி எமிரேட்ஸ் டவர்ஸ் ஹோட்டலில் உள்ள தனது அறையில் குளியலறை பாத் டப்பில் மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்களில் செய்தி வெளியாகின. அவரது ரத்தத்தில் ஆல்கஹால் கலந்திருப்பதாகவும் தடயவியல் அறிக்கையும் பிரேத பரிசோதனை அறிக்கையும் தெரிவித்தன.
தாமதம் ஏன்?
சனிக்கிழமை உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடல் திங்கட்கிழமையன்று மும்பைக்கு கொண்டு வரப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அரசு வழக்கறிஞரின் ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதமே ஸ்ரீதேவியின் உடல் இந்தியா கொண்டு வரப்படுவதில் தடை நிலவியது.
காயத்தை விசாரிக்க பரிந்துரை
நடிகை ஸ்ரீதேவியின் தலையின் பின்புறத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை அடுத்து காயம் குறித்து மீண்டும் விசாரணை செய்ய துபாய் அரசு வழக்கறிஞர் பரிந்துரை செய்திருப்பதாகவும் துபாய் ஊடகங்களில் செய்தி வெளியானது. இறுதியில் ஸ்ரீதேவியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என்று துபாய் மீடியா ஆபிஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வழக்கறிஞர் ஒப்புதல்
தடயவியல் அறிக்கைப்படி, இந்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணம் சுயநினைவு இழந்து விபத்து ரீதியில் தண்ணீரில் மூழ்கியதால் ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது. இதன் மூலம், ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டார் என்று வெளியான தகவல்களை துபாய் விசாரணை அமைப்பு புறக்கணித்தது.
இந்தியாவிற்கு கொண்டு வர ஏற்பாடு
இதன்மூலம் ஸ்ரீதேவி மரணத்தில் கடந்த நான்கு நாட்களாக நீடித்த மர்மமும், அவரது உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதில் இருந்த இழுபறி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஸ்ரீதேவியின் உடல் எம்பாமிங் செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. இரவு மும்பை வரும் ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு நாளை உடல் தகனம் செய்யப்பட உள்ளது.