16 வயதினிலே மயில், ஜானி அர்ச்சனா, மூன்றாம் பிறை விஜி-நினைவில் வாழும் ஸ்ரீதேவி- தலையங்கம்
திரைப்படங்களில் ஸ்ரீதேவியின் கதாபாத்திரங்களான 16 வயதினிலே மயிலும் ஜானி அர்ச்சனாவும் மூன்றாம் பிறை விஜியும் அவ்வளவு விரைவாக ரசிகர்கள் மனதை விட்டு நீங்காதவை.
Recommended Video
சென்னை: திரைப்படங்களில் தாம் ஏற்ற அத்தனை கதாபாத்திரங்களிலும் அற்புத நடிப்பை வெளிப்படுத்தி 1970களின் இறுதியிலும் 1980களிலும் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.
குழந்தை நட்சத்திரமாக இருந்த ஸ்ரீதேவியை 1976-ம் ஆண்டு மூன்று முடிச்சு படத்தில் செல்வி கதாபாத்திரம் மூலமாக நாயகியாக்கினார் இயக்குநர் கே. பாலச்சந்தர். அப்போது ஸ்ரீதேவிக்கு வயது 13.
இதன் பின்னர் இயக்குநர் பாரதிராஜாவின் 16 வயதினிலே மயில் பாத்திரம்... இன்னமும் மயில் பாடும் 'செந்தூரப்பூவே' பாடல் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ரஜினி, கமல் எனும் இருபெரும் நாயகர்களுடன் அழகு மயிலாக ஜொலித்தவர் ஸ்ரீதேவி.
சிகப்பு ரோஜாக்கள் சாரதா, தாயில்லாமல் நான் இல்லை புவனா என நடிப்பில் விஸ்வரூபம் காட்டிய ஸ்ரீதேவி 1980-ல் வெளியான ஜானியில் அர்ச்சனா எனும் பாடகியாக முதிர்ச்சியான கதாபத்திரத்தில் நடிப்பின் உச்சத்தைத் தொட்டார் ஸ்ரீதேவி.
1985-ம் ஆண்டு நான் அடிமை இல்லை படத்தின் பிரியா பாத்திரத்துடன் அந்த மயில் தமிழ் சினிமாவின் பயணத்தை நிறுத்திவிட்டது. தென்னிந்திய மொழிகளிலும் இந்தி திரை உலகிலும் மயிலின் கொடி உயரவே பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக கோலோச்சினார்.
சுமார் 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இங்கிலிஷ் விங்கிலிஷ் மூலம் மீண்டும் தமிழக திரையரங்குகளில் மயில் எட்டிப்பார்த்தார். 2015-ம் ஆண்டு விஜய் நடித்த புலி திரைப்படத்தில் ராணி யுவராணி பாத்திரத்தில் நடித்தார் ஸ்ரீதேவி.
அரை நூற்றாண்டுகாலம் இந்திய சினிமாவின் முகங்களில் ஒருவராக திகழ்ந்த நம் சிவகாசி மீனாம்பட்டி மீனா என்கிற ஸ்ரீதேவி என்கிற மயிலின் வாழ்க்கை 54 வயதிலேயே முடிவுக்கு வந்திருப்பது பெருந்துயரம். இந்திய திரைத்துறைக்கும் பேரிழப்பு!