பல கோடிப் பெண்களின் உணர்வை தன் ஒற்றை முகத்தில் பிரதிபலித்தவர் ஸ்ரீதேவி : கவிஞர் வைரமுத்து
பல கோடிப்பெண்களின் உணர்வை பிரதிபலித்தவர் ஸ்ரீதேவி என்று தனது இரங்கல் செய்தியில் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
சென்னை : பல கோடிப்பெண்களின் உணர்வுகளைத் தனது ஒற்றை முகத்தில் பிரதிபலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. தெற்கில் உதித்து வடக்கை வெற்றி கொண்ட நட்சத்திரம் என்று ஸ்ரீதேவியின் மறைவுக்கான இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.
தமிழ் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. தமிழில் ரஜினி, கமல் உள்ளிட்ட முண்ணனி நடிகர்களின் திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.
தமிழ், இந்தி மட்டுமில்லாது தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் மிகச்சிறந்த படங்களில் நடித்தவர்.அவருக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உண்டு. பல்வேறு விருதுகளும் அவர் பெற்றுள்ளார்.
பிரபலங்கள் இரங்கல்
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்ரீதேவி இந்தி திரைப்பட இயக்குநர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் குடியேறினார். இவர்களுக்கு ஜானவி மற்றும் குஷி என இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில், துபாயில் நேற்று திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஸ்ரீதேவி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.
நிலா உதிர்ந்துவிட்டது
அதில், ஸ்ரீதேவியின் மரணம் சற்றும் எதிர்பாராதது. நடுத்தர வயதில் மறைந்துவிட்டார். நிலா உச்சி வானத்திற்கு வந்தபோது உதிர்ந்துவிட்டது. ஒரு நடிகை என்பவர் பெண்ணினத்து உணர்ச்சிகளைப் பிம்பப்படுத்துகிறார். பலகோடிப் பெண்களின் உணர்ச்சிகளைத் தன் ஒற்றை முகத்தில் ஒளிபரப்பியவர் ஸ்ரீதேவி. கவிஞர்களுக்கு வார்த்தைகளை அழைத்துவரும் அழகு முகம் அவர்முகம்.
தெற்கில் இருந்து வடக்கிற்கு...
‘மூன்றாம் பிறை'யில் நான் எழுதிய நரிக்கதை பாடலைப் பாட வந்தபோது அவரை முதல்முறை பார்த்தேன். நானெழுதி அவர் கடைசியாகப் பாடி நடித்த புலி படத்தின் பாட்டு வெளியீட்டு விழாவில் கடைசியாகப் பார்த்தேன். தெற்கில் உதித்து வடக்கை வெற்றிகொண்ட ஒரு கலை நட்சத்திரம் விடிவதற்கு முன்பே விழுந்துவிட்டது.
பிம்பம் மறையாது
அரைநூற்றாண்டு காலம் திரையில் இயங்கினாலும் ஒரு நூற்றாண்டின் கலைப் பணியை ஆற்றிய ஸ்ரீதேவியை இந்தியக் கலையுலகம் மறக்காது. ஸ்ரீதேவியின் பிம்பம் மறைவதில்லை. திரைக்கலைஞர்களுக்கு மரணமில்லை. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும், கலை அன்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாக வைரமுத்து தெரிவித்துள்ளார்.