போலீஸ் என்கவுண்டர் செய்ய நினைத்தால் தற்கொலை செய்வேன்.... 2016லேயே எச்சரித்த "டான்" ஸ்ரீதர்!
தமிழக போலீசார் தன்னை பிடிக்க நினைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று 2016ம் ஆண்டே டான் ஸ்ரீதர் கூறியிருந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
சென்னை : தமிழக போலீசார் தன்னை பிடிக்க முயன்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று 2016ம் ஆண்டே டான் ஸ்ரீதர் கூறியிருந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
கள்ளச்சாராய வியாபாரியாக வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர் தனபாலன் பின்னர் நில டீலராக மாறி ஆட்கடத்தல், கொலை என் தமிழக தாவூத்தாக தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளார்.
ஸ்ரீதரின் இந்திய பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இன்டர்போலின் பல்வேறு ஏஜென்சிகள் தொடர்ந்து கண்காணித்து வந்தன. துபாயில் தலைமறைவாக இருந்த ஸ்ரீதர் கொழும்பு வழியாக கம்போடியிவிற்கு படகில் தப்பியோடியுள்ளார்.
கூட்டாளிகளிடம் தகவல்
புதன்கிழமை இரவு 8 மணியளவில் சயனைடு சாப்பிட்ட ஸ்ரீதர் மருத்துவமனையில் வைத்து இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இறப்பதற்கு முன்னர் ஸ்ரீதர் தன்னுடைய கூட்டாளிகளைத் தொடர்புகொண்டு "என்னுடைய சாவிற்கு போலீஸ் தான் காரணம் என்று கூறியுள்ளார். நான் இந்தியாவிற்கு நுழைய முடியாமல் போலீஸ் எனக்கு நெருக்குதல் கொடுக்கிறது இதனாலேயே நான் தற்கொலை முடிவை எடுக்கிறேன்" என்று அவர் அப்போது கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேர்மையான விசாரணை கேட்ட ஸ்ரீதர்
கடந்த 2016ம் ஆண்டில் ஸ்ரீதர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியிலும் கூட இந்தியாவிற்கு வரத் தான் தயாராக இருப்பதாகவும், தன் மீதான வழக்குகளை சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் விசாரணை நேர்மையானதாக இருக்க வேண்டும் என்றும் ஸ்ரீதர் அப்போது கூறியிருக்கிறார்.
என்கவுண்டருக்கு பயந்த ஸ்ரீதர்
44 வயது ஸ்ரீதர் போலீசார் தன்னை என்கவுண்டர் செய்துவிடுவார்கள் என்று அஞ்சுவதாகவும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார். அதை நிரூபிக்கும் வகையிலேயே தற்போது ஸ்ரீதர் தற்கலை செய்து கொண்டிருக்கிறார் என்று அவரது கூட்டாளிகள் கருதுகின்றனர்.
கள்ளச்சாராய சக்கரவர்த்தி
ஏழை விவசாயக் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீதர், ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இளம் வயதில் காஞ்சிபுரத்தில் நெசவு ஆலையில் ஈடுபட்டு பணியாற்றி வந்துள்ளார். தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கள்ளச்சாராய விற்பனையில் தனி சக்கரவர்த்தியாக திகழ்ந்த ஸ்ரீதர் சிங்கப்பூர் கேசினோவின் வாழ்நாள் உறுப்பினர். ஆடம்பரமாக வாழ்ந்த ஸ்ரீதர் பல இளைஞர்களை காஞ்சிபுரத்தில் இருந்து அழைத்து சென்று துபாயில் ஓட்டுநர்களாக தனது தொழில்களில் சேர்த்துள்ளார்.
அச்சத்தில் சோக முடிவு
எத்தனை வசதிகள், கோடிக்கணக்கில் சொத்து இருந்தாலும் தாய்நாட்டிற்கு திரும்ப முடியாமல் வளைத்துப் போட்டது காவல்துறை. தனக்கு பிடித்த நிலம் என்றால் அதனை மிரட்டி உரிமையாளரிடம் இருந்து பிடுங்கிவிடுவதில் ஸ்ரீதர் வல்லவர். தமிழ்நாட்டில் பல சொத்துகளை வளைத்து வைத்துள்ளவரை நாட்டிற்குள்ளே நுழைய விடாமல் எடுத்த நடவடிக்கையால் விரக்தியிலேயே இருந்த ஸ்ரீதர் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.