பொதுவாக என் மனசு தங்கம்.. மேனகா காந்தி தங்கச்சியை பாட்டுப் பாடி கலாய்த்த ஸ்ரீகாந்த்!
டைம்ஸ் நவ் டிவியில் நடந்த விவாதத்தின்போது முரட்டுக்காளை படப் பாடலைப் பாடி மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கை அம்பிகா சுக்லாவை கலாய்த்தார் ஸ்ரீகாந்த்.
சென்னை: டைம்ஸ் நவ் டிவியில் நடந்த ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதத்தின்போது மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் தங்கை அம்பிகா சுக்லாவை, முரட்டுக்காளை படத்தில் வரும் பொதுவாக என் மனசு தங்கம் பாடலைப் பாடி முன்னாள் கிரிக்கெட் கேப்டன் ஸ்ரீகாந்த் கலாய்த்தது வைரலாக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஜல்லிக்கட்டுக்காக பலரும் குரல் கொடுக்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாக இளைஞர்களின் எழுச்சி மிக்க ஜல்லிக்கட்டு புரட்சியைப் பார்த்து நாடே வியந்து நிற்கிறது. ஒன்றுபட மாட்டார்கள் தமிழக மக்கள் என்ற இத்தனை கால கணிப்பும் பொய்யாகிப் போன அதிர்ச்சியிலிருந்து பலரும் இன்னும் மீளவில்லை. தூக்கத்தைத் தூக்கிப் போட்டு விட்டு ஒட்டுமொத்த இளைஞர் படையும் சென்னையிலும், மதுரையிலும், கோவையிலும், சேலத்திலும் என அனைத்து நகரங்களிலும் போராடிக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் டைம்ஸ் நவ் டிவியில் நடந்த ஜல்லிக்கட்டு தொடர்பான விவாதத்தின்போது ஸ்ரீகாந்த் பாட்டுப் பாடி மேனகாவின் தங்கையைக் கலாய்த்தது வைரலாக பரவி வருகிறது.
அந்த விவாதத்தின்போது ஸ்ரீகாந்த் பேசுகையில், முரட்டுக்காளை படத்தில் வரும் ஜல்லிக்கட்டு காட்சி குறித்து விவரித்தார். பின்னர் ஜல்லிக்கட்டின் சிறப்பு குறித்துப் பேசினார். கடைசியாக அவர் பொதுவாக என் மனசு தங்கம் என்ற பாடலைப் பாடியபோது விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் வாய் விட்டு சிரித்து அதை ரசித்தார்கள்.
ஆனால் அம்பிகா சுக்லாவின் முகத்தில்தான் ஈ ஓடவில்லை. தொடர்ந்து அவர் விமர்சித்தபடி இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் பேச முடியவில்லை. வாயை மூடிக் கொண்டு விட்டார். தொடர்ந்து வி்டாமல் பாடிய ஸ்ரீகாந்த், தமிழ் வாழ்க, தமிழர்கள் வாழ்க, தமிழ் கலாச்சாரத்தை யாரும் அழிக்க முடியாது என்று பேசி முடித்தார்.. அதே தனது டிரேட்மார்க் ஸ்டைலில்!
அம்பிகா சுக்லா, சஞ்சய் காந்தி விலங்குகள் நல அமைப்பின் இயக்குநராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.