இலங்கை அவதூறு கட்டுரையால் விரக்தி: தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு ஜெயலலிதா கடிதம்
சென்னை: எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சிவசப்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ளும் செயலில் ஈடுபட வேண்டாம் என சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை கூறி கடிதம் எழுதியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவை கொச்சைப்படுத்தி இலங்கை அரசின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த அவதூறு கட்டுரை தொடர்பான செய்தியறிந்து சேலம் பெரமனூர் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார்.
இந்த செய்தியை அறிந்து முதல்வர் ஜெயலலிதா விஜயலட்சுமிக்கு நேற்று கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது நான் குரல் கொடுத்துக்கொண்டு வருவதை கொச்சைப்படுத்தி இலங்கையின் பாதுகாப்புத் துறை இணையதளத்தில் கட்டுரை வெளியிடப்பட்ட செய்தியை அறிந்து, தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு தாங்கள் முயற்சி செய்துள்ளீர்கள் என்ற செய்தி என்னை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளது.
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்றார் ஒளவையார். இயற்கையின் பரிணாமத்தில் மனித இனம் வியப்பிற்குரியது. மனித உயிர் விலை மதிப்பற்றது. இப்படிப்பட்ட இன்றியமையாத உயிரை, எந்தக் காரணம் கொண்டும் உணர்ச்சிவசப்பட்டு மாய்த்துக்கொள்ளும் செயலில் இனி ஈடுபட வேண்டாம் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழுக்காக, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக தொடர்ந்து குரல் கொடுப்பது, அதனால் ஏற்படும் துன்பங்களை சகித்துக்கொண்டு கடுமையாய் செயலாற்றுவது, அறவழியில் போராடுவது போன்றவற்றை தளராது மேற்கொள்வதன் வாயிலாக, எதையும் சாதிக்க முடியும், எதிலும் வெற்றி பெற முடியும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கை உள்ளது.
இதே நம்பிக்கையுடன் தாங்கள் வாழ வேண்டும், வாழ்ந்து சாதிக்க வேண்டும், சாதிப்பவர்களுக்குத் துணை நிற்க வேண்டும்.
தற்கொலை கோழைத்தனம், வாழ்ந்து சாதிப்பது புத்திசாலித்தனம் என்பதை புரிந்துகொண்டு, வாழ்ந்து காட்டுபவர்கள் மட்டுமே மனிதர்கள் என்பதற்கேற்ப, தாங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.