பத்திரிக்கை சுதந்திரத்தை இலங்கை அடக்குகிறது: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: பத்திரிக்கை சுதந்திரத்தை இலங்கை அரசு அடக்குகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார் தி.மு.க தலைவர் கருணாநிதி.
நேற்று, செய்தியாளர்களைச் சந்தித்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. அப்போது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதில், டி.ராஜேந்தர் திமுகவில் இணைந்தது மற்றும் அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப் படுமா மற்றும் இலங்கையில் தமிழ்ப் பத்திரிக்கையாளர் கைது என்பது குறித்தான கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களாவன :-
பலம் தான்....
கேள்வி:- டி. ராஜேந்தர் மீண்டும் தி.மு.கழகத்தில் இணைந்திருக்கிறார். இது எந்த அளவிற்கு தி.மு.கழகத்திற்கு பலமாக இருக்கும்?
பதில்:- நீங்கள் இவ்வளவு பேர் வந்திருப்பதிலிருந்தே, எவ்வளவு பலமாக இருக்கும் என்று தெரிகிறதே!
இப்போது சொல்ல முடியாது....
கேள்வி:- டி. ராஜேந்தருக்கு வருகின்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுமா?
பதில்:- இப்போதே அதைப்பற்றிச் சொல்ல முடியாது.
பொறுத்திருந்து பாருங்கள்...
கேள்வி:- நாடாளுமன்றத் தேர்தல் குறித்து பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. டி.ராஜேந்தரைத் தொடர்ந்து வேறு பல கட்சிகள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்:- வாய்ப்புகள் வருகிறதா என்பது அந்தக் கட்சிகள் இணையும் போது உங்களுக்கு அறிவிக்கப்படும்.
தேமுதிக....
கேள்வி:- தே.மு.தி.க. சார்பில் உங்களிடம் பேச்சுவார்த்தைக்கு யாராவது வந்தார்களா?
பதில்:- வரவில்லை.
பத்திரிக்கை சுதந்திரம்....
கேள்வி:- இலங்கையில் தமிழ் பிரபாகரன் என்ற பத்திரிகையாளரை அந்த நாட்டு அரசு கைது செய்திருக்கிறது. பத்திரிகைச் சுதந்திரத்தை அந்த நாடு தன் கைக்குள் வைத்துக் கொள்வதாக நினைக்கிறீர்களா?
பதில்:- இலங்கை அரசின் அத்துமீறல்களுக்கு - பத்திரிகை சுதந்திரம் உட்பட எல்லா சுதந்திரங்களையும் அடக்குவதற்கு இது ஓர் உதாரணம்.
இது கொடநாடு அல்ல...
கேள்வி:- தி.மு.க. தலைமையிடமான அண்ணா அறிவாலயம் இருக்கும் இடத்தில் சென்னை மாநகராட்சிக்கு தர வேண்டிய இடத்தைத் தரவில்லை என சென்னை மாநகராட்சியில் இன்றும் பேசப்பட்டு, தி.மு. கழக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்திருக்கிறார்களே?
பதில்:- இந்தப் பிரச்சினை பல முறை பேசப்பட்டு விரிவான விளக்கம் தரப்பட்டாகி விட்டது. வேண்டுமென்றால் மீண்டும் ஒரு முறை மாநகராட்சி அங்கே வந்து அளந்து பார்த்து நடவடிக்கை எடுக்கலாம். நாங்கள் ஒன்றும் தவறான முறையில் தி.மு.க. சார்பாக அந்த இடத்தை எடுத்துக் கொள்ளவில்லை. இது கொடநாடு அல்ல, அண்ணா அறிவாலயம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.