இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்: தமிழக மீனவர்கள் 7 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் ஏழு பேரைக் கைது செய்துள்ளது.
ராமேஸ்வரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அங்கிருந்த மற்ற மீனவர்களின் படகுகளையும் சேதப்படுத்தி உள்ளது.
கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் ஏழு பேரை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததற்காக இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்து உள்ளது.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட மீன் பிடி படகுகளுடன் நேற்று இரவு மீன் பிடிக்கச் சென்றனர். கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் அவர்களைத் தாக்கி உள்ளனர்.
மேலும், மீன் பிடிக்க விடாமல் அவர்களை விரட்டி அடித்தும், மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தியதோடு மட்டுமில்லாமல், கற்கள், பாட்டில்களை வீசி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி உள்ளனர்.
மேலும், அங்கிருந்த 7 மீனவர்களை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக வழக்கு பதியப்பட்டு உள்ளது. தற்போது அந்த மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.