ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் மீண்டும் தாக்குதல்
ராமேஸ்வரம்: பாக் ஜலசந்தி பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து 600 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். பாக் ஜலசந்தி பகுதியில் 30 க்கும் மேற்பட்ட படகுகளில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர் அவர்களின் வலைகளை அறுத்து எறிந்ததோடு மீனவர்களையும் விரட்டி அடித்துள்ளனர்.
இதுகுறித்து கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் கூறும்போது,
பாக் ஜலசந்தி பகுதியில் நேற்று நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் தங்களை தாக்கியதாகவும், அவர்களது வலைகளை அறுத்து கடலில் மொழ்கடித்ததாகவும் புகார் தெரிவித்தனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தனர்.