ஓகி புயலால் ஏற்பட்ட காயமே இன்னும் ஆறல.. இதுல இலங்கை கடற்படை வேற இந்த பாடுபடுத்துதே!
ஓகி புயல் பாதிப்பில் இருந்தே மீனவர்கள் மீண்டு வராத நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஓகி புயல் பாதிப்பில் இருந்தே மீனவர்கள் மீண்டு வராத நிலையில் இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வங்கக்கடலில் உருவான ஓகி புயல் கடந்த 30 ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தை நெருங்கியது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பலத்த சேதமடைந்தன.
புயலுக்கு முன்பு தங்குக்கடல் மீன்பிடிப்புக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஊர் திரும்பாததால் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
கடலில் இறங்கினாலே போதும்
ஓகி புயலின் கோர தாண்டவம், உறவுகளை பறிகொடுத்த சோகம் என முடங்கி கிடந்த மீனவர்கள் தற்போது தான் மீன்பிடிக்க தொடங்கியுள்ளனர். தமிழக மீனவர்கள் கடலில் இறங்கினாலே போதும் என ரோந்து கப்பல்களில் வரிந்து கட்டிக்கொண்டு வந்துவிடுகிறது இலங்கை கடற்படை.
தாக்குவதே வாடிக்கை
வயிற்றுப் பிழைப்புக்காக மீன்பிடிக்க செல்லும் மீனவர்களை இலங்கை கடற்படை எல்லை தாண்டி வந்ததாக கூறி படகுகளுடன் அவர்களை கைது செய்வதும், மீனவர்களின் வலைகளை அறுத்தெரிந்து அவர்களை தாக்குவததையும் வாடிக்கையாக கொண்டுள்ளது.
எத்தனையோ போராட்டங்கள்
ஓகி புயல் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களிடம் இருந்து தப்பி இலங்கை கடற்படையிடம் சிக்கி சின்னாபின்னமாகி வருகின்றனர் தமிழக மீனவர்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி எத்தனையோ முறை தமிழக மீனவர்கள் போராட்டங்கள் நடத்திவிட்டனர்.
பேரிடர்களை தடுக்க முடியாது
ஆனாலும் மத்திய மாநில அரசுகள் மீனவர்கள் விவகாரத்தில் எந்த அதிரடி நடவடிக்கையும் எடுக்கவில்லை. இயற்கை சீற்றங்களையும் பேரிடர்களையும் தடுக்க முடியாது.
வேதனையுடன் கோரிக்கை
செயற்கை இடரான இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வேதனையுடன் கோரிக்கை விடுக்கின்றனர் மீனவர்கள். ஆனால் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மத்திய மாநில அரசுகள் ஆர்வம் காட்டாதது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
துயரங்களுக்கு விடிவு எப்போது?
மீனவர்களின் இந்த துயரங்களுக்கு விடிவு எப்போது? உருப்படியான தீர்வு காண்பது எப்போது? அக்கறையுடன் தீர்வு காணப் போவது யார்.. இனியாவது மீனவர்களை பொருட்டாக நினைத்து இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமா இந்த அரசுகள்?