காங்கிரஸ், தி.மு.க தோல்வி ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனை: டி.ராஜேந்தர்
சென்னை: லோக்சபா தேர்தலில் தி.மு.க, காங்கிரஸ் அடைந்த தோல்வி, ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனை என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டி.ராஜேந்தர், கூறியதாவது:
ஈழத்தமிழர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா காட்டிய ஈடு இணையற்ற அக்கறையே லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெற்றது.
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் காங்கிரசுடன் தி.மு.க கைகோர்த்ததினால் ஈழத்தமிழர்களின் ஆன்மாக்கள் கொடுத்த தண்டனைதான் லோக்சபா தேர்தல் தோல்விக்குக் காரணம்.
ராஜினாமா நாடகம்
ஈழத்தில் போர் நடைபெற்ற போது திமுக எம்.பி.க்கள் ராஜினாமா நாடகம் ஆடினார்கள். அப்போதே ராஜினாமா செய்திருந்தால் தமிழக மக்கள் இப்போது வாக்களித்திருப்பார்கள். ஆனால் அப்போது நாடகம் போட்ட திமுகவிற்கு இப்போது மக்கள் தண்டனை கொடுத்திருக்கின்றனர்.
தமிழகத்திற்கு துரோகம்
மத்தியில் 10 ஆண்டுகால ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தது. காவிரி பிரச்னை ஆகட்டும், முல்லைப் பெரியாறு பிரச்னை ஆகட்டும். அவர்கள் தமிழகத்திற்காக என்ன செய்தார்கள்.
அமைச்சர் பதவி
எத்தனையோ அமைச்சர் பதவி கேட்டு போராடிய திமுக, நீர்பாசனத்துறையை கேட்டு போராடமல் விட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜயகாந்த் பெருந்தன்மை
ஈழத்தமிழர்களின் கண்ணீரை வைத்து நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று நண்பர் விஜயகாந்த் கூறிவிட்டார். நண்பர் விஜயகாந்த் பெருந்தன்மையானவர் என்றும் டி.ராஜேந்தர் கூறினார்.
சாயம் வெளுத்திருக்கும்..
அ.தி.மு.க தனியாக நின்று வெற்றி பெற்றுள்ளது. ஆனால், மற்ற கட்சிகள் தனியாக நின்றிருந்தால் சாயம் வெளுத்திருக்கும் என்றார் டி.ராஜேந்தர்.
நல்லதும் கெட்டதும் உண்டு
அ.தி.மு.க அரசின் மூன்றாண்டு கால ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, யாருடைய ஆட்சியாக இருந்தாலும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும் என்றார் ராஜேந்தர்.