இலங்கையில் நடந்த போரால் கணவரை இழந்து தவிக்கும் 90 ஆயிரம் பெண்கள் - பகீர் ரிப்போர்ட் !
இலங்கையில் நடந்த போரினால் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்து தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லை : இலங்கையில் நடந்த போரில் பலர் கொல்லப்பட்டதால் 90 ஆயிரம் பெண்கள் கணவரை இழந்து தவித்து வருவதாக கள ஆய்வு ரிப்போர்ட் தெரிவிப்பதாக அந்நாட்டு பத்திரிகை ஆசிரியர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.
நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலை கல்லூரியில் சங்ககால மக்களின் பாலுறவு சிந்தனைகளும், சமூக ஒழுக்கம் என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெற்று வருகிறது.
இந்த கருத்தரங்கில் இலங்கையை சேர்ந்த பத்திரிக்கையின் மூத்த ஆசிரியர் மதனவாசன் கலந்து கொண்டு பேசியதாவது, பண்டைய காலத்தில் நாடு பிடிக்கவும், செல்வம் கவரவும், அடிமைகளாக நடத்தவும் போர்க்கலம் புகும் சம்பவம் நடந்தன.
சங்க இலக்கிய கால வாழ்வு காதலும், வீரமும் நிறைந்ததாக இருந்தது. போரில் கணவரை இழந்த பெண்களுக்கு வாழ்வாதரமாக நெசவு தொழில் இருந்தது. ஆனால் இன்று நிலைமை வேறாக இருக்கிறது. இதற்கு உதாரணம் இலங்கை தமிழ் மண்ணில் நடந்த கசப்பான சம்பவங்கள்.
இலங்கை போரில் ஏராளமான பெண்கள் விதவைகளாயினர். இவர்களில் 90 ஆயிரம் பேர் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். இவர்களில் கணிசமான அளவினர் 20 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்கள். இவர்களின் மன உளைச்சல் இதுவரை சரி செய்யப்படவில்லை.
இதுகுறித்த கள ஆய்வு தகவல்கள் அடங்கிய ரிப்போர்ட் ஒன்று அரசிடம் சமர்பிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு என்னென்ன வழியில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என்று அரசு ஆலோசித்து வருகிறது. இருப்பினும் இத்தனை பெண்களின் வாழ்க்கை சூழல் மிகவும் மோசமான நிலையிலேயே இருந்து வருகிறது.
வாழ்வியல் கருத்துகளை பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டும். எதையும் தான் மட்டும் படித்தால் போதும் என்ற மனநிலை இருக்க கூடாது. அதை பிறருக்கு கொண்டு செல்லும் வகையில் நமது பணி இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்து உள்ளார்..