ஸ்ரீரங்கம்: 96,515 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி... திமுக நம்பர் 2... மற்றவர்கள் காலி!
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி 96,515 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆனந்த்தை அவர் தோற்கடித்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு பிப்ரவரி 13ம் தேதியன்று இடைத் தேர்தல் நடைபெற்றது. பெரிய அளவில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நடந்து முடிந்த இந்த வாக்குப் பதிவின்போது, 81.83 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் திருச்சி - மதுரை சாலையில் பஞ்சப்பூரில் உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகின்றன. பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. காலை 8 மணிக்கு வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. 14 மேஜைகள் போடப்பட்டு அதில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. மொத்தம் 23 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.
அதிமுக சார்பில் எஸ். வளர்மதி, திமுக சார்பில் என். ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அண்ணாதுரை, பாஜக சார்பில் சுப்பிரமணியம், சமூக சேவகர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இதில் முதல் சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி முன்னிலையில் இருந்து வந்தார். எந்த சுற்றிலும் திமுக வேட்பாளருக்கு முன்னிலை கிடைக்கவில்லை.
இறுதியாக அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி அமோக வெற்றி பெற்றார்.
வேட்பாளர்கள் பெற்ற வாக்ககுகள் விவரம்:
எஸ். வளர்மதி (அதிமுக) - 1,51,561
ஆனந்த் (திமுக) - 55,045
சுப்பிரமணியன் (பாஜக) - 5015
அண்ணாதுரை (சிபிஎம்) - 1552
டிராபிக் ராமசாமி - 1167
நோட்டா - 1919
பாஜகவுக்கு டெபாசிட் காலி
அதிமுக வேட்பாளர் எஸ். வளர்மதி 96,515 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற அதிமுக மற்றும் 2வது இடத்தைப் பிடித்த தி்முக வேட்பாளர்களைத் தவிர மற்ற அனைவரும் டெபாசிட்டைப் பறி கொடுத்தனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியிலிருந்து ஜெயலலிதா சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதால் அவரது எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவி பறிபோனது. இதையடுத்தே அங்கு இடைத் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.