செருப்பால் அடித்தால் கூட வாங்க நான் தயார்.... ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அதிரடி!
சென்னை: தன்னுடைய கருத்தை அதிரடியாகவும், ஆணித்தரமாகவும் முன்வைப்பவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். தன்னுடைய தாத்தா பெரியாரிடம் அரசியல் அரிச்சுவடி கற்றதாக கூறும் அவர், மாலைகள் வாங்குவதற்காக மட்டுமே என் கழுத்து இல்லை. செருப்படிகள் வாங்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது சாக்கடையில் காலை விடுவதற்கு சமம் என்று அதிரடியாக கூறிய அதே நேரத்தில் இடைத்தேர்தலில் பணம்தான் விளையாடுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நேரத்தில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது எங்களின் சக்தியை விரையம் செய்வதற்கு சமம் என்று கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிர்க்கு பேட்டியளித்த ஈ.வி.கே.எஸ், தமிழக காங்கிரஸ் கட்சியின் இலக்கு, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், கோஷ்டி பூசல், வெளியேறிய தலைவர்கள் பற்றி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். மேற்கொண்டு படியுங்களேன்.
பின்னால் யாரும் போகவில்லை
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன்தான் சென்றார்கள் ஆனால் 5 சதவிகித தொண்டர்கள் கூட போகவில்லை. வாசன் சென்றதால் எந்தவித இழப்பும் இல்லை. ஜெயந்தி தனி நபராகத்தான் கட்சியை விட்டு சென்றுள்ளார். அவருடைய நிழல் கூட சென்றதாக தெரியவில்லை.
புதுப்பொலிவோடு வளர்கிறோம்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்ற சூழ்நிலையில் பதற்றமாக இருந்தேன். காங்கிரஸ் ஒருகாலத்தில் பலவீனமாக இருந்தது. இப்போது காங்கிரஸ் புதுப்பொலிவோடு பலத்தை பெருக்கிக் கொண்டிருக்கிறது.
அது வீண் விரையம்
ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடுவது சக்தியை விரையம் செய்வது போன்றது. நாங்கள் கட்சியை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் போட்டியிட்டால் எங்களின் சக்தி விரையமாகிவிடும்.
பணம் விளையாடுகிறது
இடைத்தேர்தல் முடிவு எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான். பணம்தான் ஸ்ரீரங்கத்தில் விளையாடுகிறது. அதில் போட்டியிடுவது வீண் விரையம். சாத்தான்குளம், திருமங்கலத்தில் ஆரம்பித்தது இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெல்லக்கூடிய சூழ்நிலை இருக்கிறது.
அதிகாரிகள் பணம் விநியோகம்
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் 144 தடையுத்தரவு போடப்பட்டது. அரசு வாகனங்கள், போலீஸ் வாகனங்களில் தடையின்றி பணம் செல்லப்பட்டு அதிகாரிகளால் பணம் விநியோகம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையரே கூறியுள்ளார். அதே நிலைதான் இப்போது ஸ்ரீரங்கத்திலும் நடைபெறுகிறது.
எங்கே அவர்
எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று கூறிய தமிழருவி மணியன் எங்கே இருக்கிறார். லோக்சபா தேர்தல் தோல்விக்குப் பின்னர் காங்கிரஸ் இங்கே இருக்கிறது. இப்போது தமிழருவி மணியன் எங்கே இருக்கிறார். அவர் நிலையற்றவர்.
எங்களின் இலக்கு
2016 சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றி பெரும். நாங்கள் ஆட்சியமைக்கா விட்டாலும் நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது.
பொதுவாகத்தான் சொன்னேன்
காங்கிரஸ் கட்சியில் இருந்து தந்தையும் மகனும் வெளியேற வேண்டும் என்று நான் பொதுவாகத்தான் சொன்னேன். ப.சிதம்பரத்தை சொல்லவில்லை. பல தலைவர்களும் அவரது மகன்களும் காங்கிரஸ் கட்சியில் இருக்கின்றனர். நான் சொன்னதை கற்பனை செய்து கொண்டு பேசக்கூடாது. சிதம்பரத்தை சொல்லவேண்டும் என்று நினைத்திருந்தால் நேரடியாகவே கூறியிருப்பேன்
மாலையும் செருப்படியும்
கண்டன சுவரொட்டிகளைப் பற்றி ஒருபோதும் நான் கவலைப்படுவதில்லை. மாலை போட்டாலும் செருப்பு வீசினாலும் வாங்கிக்கொள்ளும் மனநிலை எனக்கு உண்டு. மாலைகள் வாங்குவதற்குமட்டும் இந்த கழுத்து இல்லை.... செருப்படி வாங்கவும் நான் தயாராகவே இருக்கிறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.