மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஸ்ரீரங்கம் தேர்தல் களத்தில் குதித்தது.. வேட்பாளர் அண்ணாதுரை!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாக கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் அறிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் க.அண்ணாதுரை போட்டியிடுவார் எனவும் அவர் அறிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜி. ராமகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும். கட்சியின் சார்பில் க. அண்ணாதுரை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கும் என்று கூறினார். தவிர மதசார்பற்ற கட்சிகளின் ஆதரவை கோருகிறோம். ஆளும் அ.தி.மு.க. அரசு மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது என்றார்.வேட்பாளர் க. அண்ணாதுரை திருச்சி மாநகர மாவட்டச் செயலாளராக உள்ளார் என்றும் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
நான்குமுனைபோட்டி?
காலியாக உள்ள ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுக்களை தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர். மதிமுக, பாமக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துவிட்டன. பாஜக - தேமுதிக இடையே பேச்சுவார்த்தையில் இழுபறி நிலவுகிறது.
இந்தநிலையில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஒருவேளை தேசியஜனநாயகக் கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.