ஸ்ரீரங்கம் கோவில், ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பொதுச்செயலாளர் முதல்வராக பதவியேற்றார். ஆனால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதனால் ஜெயலலிதா தனது முதல்வர் மற்றும் எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இத்தொகுதிக்கு மார்ச் மாதத்துக்குள் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. இந்த இடைத் தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஸ்ரீரங்கம் ரயில் நிலைய அதிகாரிக்கு இன்று ஒரு மர்ம கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இடைத்தேர்தலை எதிர்கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.