'ஆர்டினரி' தொகுதியான 'அம்மா' தொகுதி ஸ்ரீரங்கம்!
ஸ்ரீரங்கம்: தமிழக முதல்வர் தொகுதி என்ற விஐபி அந்தஸ்தினை கடந்த 4 ஆண்டுகளாக பெற்றிருந்த ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்குப் பின்னர் அந்த அந்தஸ்தினை இழந்துள்ளது.
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக சார்பில் ஜெயலலிதா போட்டியிட்டார். அப்போது ஸ்ரீரங்கம் தனது பூர்வீகம் என்றும், வெற்றி பெற்றால் ஸ்ரீரங்கம் தொகுதியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன் என்றும் கூறி பிரசாரம் செய்தார். பின்னர் அந்த தொகுதியில் வெற்றி பெற்று, முதல்வராகவும் பதவியேற்றார்.
இதையடுத்து இந்த தொகுதி வி.ஐ.பி அந்தஸ்தை பெற்றது. தமிழக அரசின் பல்துறைகளும், ஸ்ரீரங்கம் தொடர்பான திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதி வேகமாக செயல்படுத்தினர. பல நலத் திட்டங்களும், ஸ்ரீரங்கத்திற்குக் கிடைத்தன.
இந்த நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதை தொடர்ந்து அவர் எம்.எல்.ஏ மற்றும் முதல்வர் பதவியை இழந்தார்.
இதையடுத்து ஸ்ரீரங்கம் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதால், வி.ஐ.பி தொகுதி என்ற அந்தஸ்தை இந்த தொகுதி இழந்தது.
இத்தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் ஒரு வி.ஐ.பி வேட்பாளார்தான் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வளர்மதி எம்.எல்.ஏவாகியுள்ளதால் விஐபி அந்தஸ்தை இழந்துள்ளது ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி.