ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: பா.ஜ.க. வேட்பாளர் யார்? அமித்ஷா அறிவிக்கிறார்
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக திமுக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு அனலை கிளப்பிவரும் நிலையில், பாஜகவின் வேட்பாளரை சென்னை வரும் அமித்ஷா அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசுவோம் என்றும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியுள்ளார்.
2011ஆம் ஆண்டு ஜெயலலிதா போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வெற்றிபெற்ற தொகுதி ஸ்ரீரங்கம். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைபெற்றபிறகு பதவியிழந்ததால் அந்த தொகுதி காலியானது. இதனையடுத்து வரும் பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுக, திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுபற்றியும், போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது பற்றியும் முறையான அறிவிப்பு வெளியாகவில்லை
சென்னை வரும் அமித்ஷா
ஆடிட்டர் குருமூர்த்தியின் மகள் திருமணவிழா சென்னையில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களை சேர்ந்த முதல்வர்களும் இன்று சென்னை வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கு தமிழக பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. மத்திய அமைச்சர்கள் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
சென்னை வரும் அமித்ஷாவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் சந்திக்கிறார்கள். அப்போது ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
அமித்ஷா அறிவிப்பு
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது என்று தமிழக பாஜக ஏற்கனவே முடிவு செய்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை ஞாயிறன்று அமித்ஷா வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் யார்
வேட்பாளராக திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் பார்த்தீபன்,மாநில துணைத்தலைவர் சுப்ரமணி, பாஜக அரசியல் வியூகக்குழு உறுப்பினர் ஆசீர்வாதம் ஆச்சாரி ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருக்கின்றனவாம்.
முதல் இடைத்தேர்தல்
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அதிக கவனம் செலுத்தவும் பாஜக மேலிடம் உத்தரவிட்டுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணன்
இதனிடையே ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது குறித்து இன்று (சனிக்கிழமை) முடிவு எடுக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். பாஜக வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அமித்ஷாவுடன் ஆலோசனை
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் தொடர்பாக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் சனிக்கிழமை ஆலோசனை நடத்தப்படுகிறது. இதில் எடுக்கப்படும் முடிவு குறித்து சரியான நேரத்தில் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவிப்பார் என்று கூறியுள்ளார்.
அதிமுக, திமுக அறிவித்துள்ள வேட்பாளர்களுக்கு கடுமையான போட்டியை தரும் வகையில் சரியான வேட்பாளரை களமிறக்குமா பாஜக, இன்று தெரிந்துவிடும்.